முதுகுளத்தூரில் தொடர்ந்து பதட்டம் : கொல்லப்பட்டவர் குடும்பத்திற்கு கருணாநிதி ரூ. 2 லட்சம்
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஆட்டோ டிரைவர் கொல்லப்பட்டதை கண்டித்து ரகளையில் ஈடுபட்டு போலீசாரை தாக்கியதற்காக 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழசாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரை பாண்டியன் (32). ஆட்டோ டிரைவர். அவர் நேற்று முன்தினம் கீழமானாங்கரை பேருந்து நிறுத்தம் அருகே உடம்பில் வெட்டுக்காயங்களுடன் பிணமாகக் கிடந்தார். இதைப் பார்த்த அக்கிராம மக்களும், துரைப்பாண்டியனின் உறவினர்களும் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பவிடாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசாரும், அதிகாரிகளும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அது தோல்வி அடைந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக கலைந்து போகச் செய்தனர். உடனே அவர்கள் போலீசார் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து போலீசார் வானத்தை நோக்கி 5 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டு பொதுமக்களை கலைந்து போகச் செய்தனர்.
இந்த கலவரத்தால் முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது. அங்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகளும் ஓடவில்லை. கடந்த 2 நாட்களாக முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. பேருந்துகளும் ஓடவில்லை.
அங்கு மேலும் எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் மீது கற்களை வீசியதாகவும், வாகனங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாகவும், கலவரத்தில் ஈடுபட்டதாகவும் 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக செல்லப்பன், குருசாமி என்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்மண்டல ஐ.ஜி. பாலசுப்பிரமணியன், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. அமல்ராஜ் ஆகியோர் முதுகுளத்தூர் பகுதியை பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார்கிரி முதுகுளத்தூரிலேயே முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரடியாக கவனித்து வருகிறார்.
கல்வீச்சில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சின்ன கருத்தப்பாண்டியன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தலையில் 6 தையல் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொல்லப்பட்ட ஆட்டோ டிரைவரின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் கருணாநிதி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.