பட்ஜெட் ஸ்பெஷல்: வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாகிறது!
பாராளுமன்றத்தில் வரும் திங்கள்கிழமை (28-ந் தேதி) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மாதச் சம்பளக்காரர்களுக்கு வருமானவரிச் சலுகைகளை அவர் அறிவிக்கிறார்.
அதன்படி, தற்போது ரூ.1 லட்சத்து 60 ஆயிரமாக உள்ள வருமானவரி விலக்கு உச்சவரம்பு, வரும் நிதியாண்டிலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுகிறது. அதாவது, ரூ.2 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி கிடையாது. ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு 10 சதவீத வருமானவரி விதிக்கப்படும். ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம்வரையிலான ஆண்டு வருமானத்துக்கு ரூ.20 சதவீத வரியும், ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட வருமானத்துக்கு 30 சதவீத வரியும் விதிக்கப்படும்.
ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி கழிவு பெறலாம். இதை இரண்டு பிரிவாக பெறலாம். பொது வைப்பு நிதி, புதிய ஓய்வூதிய திட்டங்கள், அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி போன்ற நீண்ட கால சேமிப்பு திட்டங்கள் மீதான முதலீட்டுக்கு ரூ.1 லட்சம் வரையும், ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரிமியங்கள், பிள்ளைகளின் கல்விக் கட்டணம் ஆகியவற்றின் மீது ரூ.50 ஆயிரம் வரையும் கழிவு பெறலாம்.
வருமானவரி மீது விதிக்கப்பட்டு வந்த 3 சதவீத கல்வி வரி ரத்து செய்யப்படுகிறது. மேலும், வீட்டுக்கடன் வட்டிக்கு ரூ.1.5 லட்சம் வரையிலான வரிச்சலுகை நீடிக்கும்.
இந்த புதிய வருமானவரி சலுகைகள் மூலம், வீட்டுக்கடன் இல்லாதபட்சத்தில், ரூ.5 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கான வரிச்சுமை ரூ.22,600-ல் இருந்து ரூ.15 ஆயிரமாக குறையும். இதன்மூலம் அவர்கள் ஆண்டுக்கு ரூ.7,660-ஐ மிச்சம் செய்யலாம். விலைவாசி உயர்வால் அதிகரித்துள்ள அவர்களின் வாழ்க்கைச் செலவுகளை ஈடுசெய்ய இத்தொகை உதவும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுபோல், 5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள், அதற்கேற்ப அதிக வரித்தொகையை மிச்சம் செய்யலாம்.
மேலும், இந்த மத்திய பட்ஜெட்டில், கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு சலுகையும் அறிவிக்கப்படுகிறது.
ராகுலின் பரிந்துரை!
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தலைமையிலான குழு, சமீபத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தது.
விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்குவது போல, நெசவாளர்களுக்கும் வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். அதை ஏற்று, நெசவாளர்களுக்கு கடன் அட்டை உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்க பிரதமர் சம்மதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.