தேதி அறிவிப்பி்ல் அவசரம் காட்டியது ஏன்?- தேர்தல் ஆணையத்திற்கு கருணாநிதி கண்டனம்
இதுகுறித்து அவர் எழுதியுள்ளதாவது:
சட்டசபைத் தேர்தல் கால அட்டவணை குறித்த தேர்தல் ஆணையத்தின அறிவிப்பு அவசர கோலத்தில் வெளியாகியுள்ள ஒன்றாகும். இதுதொடர்பாக தமிழக அரசுடன் தேர்தல் ஆணையம் எந்த ஆலோசனையயும் நடத்தவில்லை. இந்த அவசர கோல நடவடிக்கையின் பின்னணி என்ன என்பதை அறிய நான் ஆவலாக உள்ளேன்.
அனைவரும் ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஏப்ரல் 13ம் தேதி தேர்தலை அறிவித்துள்ளது ஆணையம்.
ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் தேர்தலை வைத்திருந்தால், அரசியல் கட்சியினருக்கும், வேட்பாளர்களுக்கும் பிரசாரத்திற்கு கூடுதல் நாட்கள் கிடைத்திருக்கும்.
மேலும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடந்தாலும், வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதிதான் நடைபெறவுள்ளது. மேலும் மே 17ம் தேதிக்குள் புதிய சட்டசபையை அமைக்கும் பணிகளை முடித்தாக வேண்டும்.
மே 14ம் தேதிதான் முழுமையான முடிவுகள் வெளியாகும். அதற்குப் பிறகு 2 நாட்கள் மட்டுமே உள்ளது புதிய சட்டசபையை அமைக்கவும், புதிய அமைச்சரவையை அமைக்கவும். இது மிகவும் குறுகிய கால அவகாசமாகும்.
மேலும், அரசியல் கட்சிகளுக்குப் பிரசாரத்திற்கான கால அளவும் வெறும் 17 நாட்களே கிடைக்கின்றன.
சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு அதற்கு நேர் மாறாக உள்ளது. என்ன செய்வது, தேர்தல் ஆணையம் சுயேச்சையான அமைப்பு, யாரிடமும் ஆலோசனை கலக்க வேண்டிய அவசியம் அதற்கு இல்லை.
மே 17ம் தேதிதான் புதிய சட்டசபையைக் கூட்ட முடியும் என்கிறபோது, ஏப்ரல் 13ம் தேதியே தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்பதை அறிய நான் விரும்புகிறேன்.
எது எப்படி இருப்பினும் திமுக தொண்டர்கள் இன்றே மக்களிடம் செல்ல வேண்டும். தேர்தல் பணிகளை தொடங்கிட வேண்டும். திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.