திமுக கூட்டணியில் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 சீட்
சென்னை: திமுக கூட்டணியில் முதல் முறையாக இடம் பெற்றுள்ள கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்திற்கு 7 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணிக்கு மேற்கு மண்டலத்தில் பெரும் சரிவை ஏற்படுத்த இந்தக் கட்சியே காரணம். குறிப்பாக காங்கிரஸ் கட்சி முக்கிய தொகுதிகளில் தோற்றதற்கு இக்கட்சி பிரித்த வாக்குகளே காரணம்.
இதையடுத்து தற்போது இக்கட்சியை தனது கூட்டணியில் சேர்த்துள்ளது திமுக.
நேற்று இரவு இக்கட்சிக் குழுவினருக்கும், திமுக குழுவுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் 7 சீட்கள் தர உடன்பாடு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடந்தது. ஸ்டாலின், அமைச்சர்கள் வேலு, பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் முத்துச்சாமி உள்ளிட்டோர் திமுக சார்பில் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கொங்கு நாடு கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில், நாங்கள் 7 தொகுதிகளிலும் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவோம் என்றார்.
கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் திமுககூட்டணிக்கு வந்திருப்பதன் மூலம் அக்கூட்டணிக்கு கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் பலம் கூடியுள்ளது. இப்பகுதி அதிமுகவின் கோட்டையாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.