18 தொகுதிகள் வேண்டும்-இல்லாவிட்டால் 19ம் தேதி இறுதி முடிவு: சிபிஎம்
இதுவரை இல்லாத அளவுக்கு கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிகள், மிரட்டல்களால் திமுகவும் சரி, அதிமுகவும் சரி பெரும் சிக்கலில் மாட்டி விழி பிதுங்கிப் போய் நிற்கின்றன. காங்கிரஸ் கட்சி மூலம் திமுகவுக்கு பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் அதிமுகவிலோ, அக்கட்சியால் பிற கட்சிகளுக்கு பெரும் சிக்கலாகியுள்ளது.
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்து விட்டது. தற்போது தொகுதிகளைப் பிரிக்கும் வேலை மும்முரமாக நடந்து வருகிறது. அதிமுகவில் இன்னும் தொகுதிப் பங்கீடே முடியவில்லை. முக்கிய கட்சிகளான மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொகுதிப் பங்கீட்டை முடிக்க தவம் இருப்பது போல காத்துக் கொண்டுள்ளன. ஆனால் ஜெயலலிதாவோ அக்கட்சிகளை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் கவலையின்றி தன் பாட்டுக்கு பிற பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
நேற்று வந்த தேமுதிகவுக்கு அதி வேகமாக சீட் கொடுத்து விட்ட ஜெயலலிதா, இந்த மூன்று கட்சிகளையும் கிடப்பில் போட்டு விட்டார். அவர்களை அவமதிப்பது போல சரத்குமார் உள்ளிட்டோருக்கெல்லாம் சீட் தந்து கொண்டு அனுப்பி வைத்து வருகிறார்.
சிபிஎம் 18 தொகுதிகள் வர கேட்கிறது. ஆனால் அதிமுகவோ அதிகபட்சம் 12க்கு மேல் தர முடியாது என்று கூறி விட்டதாம். மதிமுக 30 தொகுதிகள் வரை கேட்டுள்ளது. ஆனாலும், 7 சீட் வரைதான் என்று கூறி விட்டாராம் ஜெயலலிதா. இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 தொகுதிகள் வரைதான் தர முடியும் என்றும் ஜெயலலிதா கூறி விட்டாராம்.
இதனால் தொகுதிப் பங்கீடு முடிவடையாமல் இழுபறியாகியுள்ளது. அதிமுக தரப்பிலிருந்து யாரும் இதுவரை அழைப்பு விடுக்காததால், இந்த மூன்று கட்சிகளும் பெரும் குழப்பத்தில் உள்ளன.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்போது அதிரடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இக்கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர், கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 18 தொகுதிகள் கேட்டு வலியுறுத்தி வருகிறது. ஆனால், அ.தி.மு.க. தரப்பில் 11 தொகுதிகள் தருவதாக கூறி வருகிறார்கள். இதை ஏற்க முடியாது.
மாநில குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அ.தி.மு.க. குழுவுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்துவோம். உடன்பாடு ஏற்படும் வகையில் பேச்சுவார்த்தையை நடத்த, மாநில செயற்குழுவுக்கு, மாநில குழு அதிகாரம் அளிக்கிறது.
பேச்சுவார்த்தையில் திருப்தி இல்லை என்றால், வரும் 19-ந் தேதி மீண்டும் மாநில குழுவை கூட்டி இறுதி முடிவை எடுப்போம் என்றார்.
கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 35 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். இரு இடதுசாரி கட்சிகளும் திமுக கூட்டணியில் இருந்தன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிமுக கூட்டணியில் இடம் பெற்று 9 தொகுதிகளில் போட்டியிட்டது. இப்போது தேமுதிகவை மட்டுமே ஜெயலலிதா முக்கியமாக நினைப்பதால் மற்ற கட்சிகள் குறித்து அவர் அதிக அக்கறை காட்டவில்லை.