ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு-யார் யார் மீது குற்றப்பத்திரிக்கை?
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடாக ஒதுக்கப்பட்டதால் நாட்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, ஸ்வான் நிறுவனத்தின் உஸ்மான் பல்வா, தொலைத் தொடர்பு முன்னாள் செயலர் சித்தார்த்த பெகுரா, ராசாவின் தனிச் செயலர் ஆர்.கே.சண்டோலியா ஆகியோர் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் மார்ச் 31-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புலனாய்வின் நிலை தொடர்பான அறிக்கை மார்ச் 29-ம் தேதி தாக்கல் செய்யப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்டிருக்கும் ஆ.ராசா உள்ளிட்ட நால்வரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையின் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வரிசையில் இடம்பெற்றிருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர, ஸ்வான் டெலிகாம், யூனிடெக் ஆகிய நிறுவனங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் இதில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேபோல, ஸ்வான் நிறுவனத்தின் உஸ்மான் பல்வா, கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த விவரங்களும் சிபிஐ தயாரித்திருக்கும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி ஆகியோரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெறாது எனத்தெரிகிறது.
தயாளு அம்மாளைப் பொறுத்தவரை பெரும்பான்மை பங்குகளை அவர் வைத்திருந்தாலும் கூட அவர் ஒர்க்கிங் பார்ட்னர் இல்லை என்பதால் அவர் மீது குற்றப்பத்திரிக்கை இருக்காது என்று தெரிகிறது. கனிமொழி குறித்து இதுவரை விவரம் தெரியவில்லை. அவரது பெயரும் இடம் பெற வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.