இந்திய மூஸ்லீம்கள் மீது எனக்கு எந்தவித பகைமையும் கிடையாது: பால் தாக்கரே
மும்பை: இந்திய முஸ்லீம்கள் மீது எனக்கு எந்தவித பகைமை உணர்வும் இல்லை என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே தெரிவித்துள்ளார்.
சிவசேனா கட்சிப் பத்திரிகையான 'சாம்னா'வில் இன்று வெளியாகியுள்ள பால் தாக்கரே பேட்டி வருமாறு,
தலைமுறை தலைமுறைகளாக இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் மீது எனக்கு எந்தவித பகைமையும் கிடையாது. அவர்கள் மீது நான் புகார் கூறவே மாட்டேன். வெளிநாடுகளில் இருந்து வந்து நம் நாட்டில் பிரச்சனை உருவாக்குபவர்களைத் தான் எதிர்க்கிறேன். அவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் இங்குள்ள முஸ்லீம்களின் மனதை கெடுக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொங்கன் பகுதிக்கு வந்திருக்கும் வெளிநாட்டு முஸ்லீம்கள், அங்குள்ள முஸ்லீ்களுக்கு தவறான பாதையைக் காட்டுகின்றனர் என்றார்.
வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்கள் மீது தான் பால் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார். வங்கதேசத்தைச் சேர்ந்த சுமார் ஒன்றரை கோடி பேர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து வசித்து வருவதாக ஏற்கனவே பாஜக குற்றம் சாட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.