விமரிசையாக நடந்த மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று மிக வெகு விமரிசையாக நடந்தது.
காலை 10.30 முதல் 10.56 மணிக்குள் மிதுன லக்னத்தில் இந்தத் திருக்கல்யாணம் நடந்தது. மீனாட்சி அம்மன் சார்பில் பிரகாஷ் பட்டர், சொக்கநாதர் சார்பில் அசோக் பட்டர் மாலை மாற்றிக் கொண்டனர்.
பின்னர் மீனாட்சி அம்மனுக்கு வைர தாலி கட்டப்பட்டது. மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் கட்டப்பட்ட நேரத்தில் கோயிலில் திரண்டிருந்த ஏராளமான பெண் பக்தர்கள் தங்களது திருமாங்கல்ய கயிறுகளை மாற்றிக் கொண்டனர்.
திருக்கல்யாணத்தையொட்டி முன்னதாக காலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும் பவளக்கனிவாய் பெருமாளும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு எழுந்தருளினர்.
திருக்கல்யாண நிகழ்ச்சிக்குப் பின் பக்தர்கள் மீனாட்சி அம்மனுக்கு மொய் எழுதினர்.
திருக்கல்யாணத்தையொட்டி மதுரையில் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருக்கல்யாண நிகழ்ச்சிக்குப் பின் தெற்காடி வீதி பகுதியில், கோயில் சார்பில் மண்டபங்களின் மேற்கூரையிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நாளை அதிகாலை 6 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 4 மாசி வீதிகளில் தேர் உலா வந்து பக்தர்களுக்கு சுவாமியும், அம்பாளும் அருள்பாலிக்கின்றனர்.