பல மாத தாமதத்திற்குப் பின் சுரேஷ் கல்மாடி இன்று கைது
படு சாவாதனமாக காமன்வெல்த் ஊழல் வழக்கை விசாரித்து வருகிறது சிபிஐ. படு நிதானமாக ரெய்டுகள் நடத்தியும், மிக மிக தாமதமாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகிறது சிபிஐ.
இந்த நிலையில் மிகப் பெரிய தாமதத்திற்குப் பின்னர் காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக செயல்பட்ட கல்மாடியை இன்று கைது செய்தது சிபிஐ.
இன்று கல்மாடியை விசாரணைக்காக வரவழைத்திருந்தது சிபிஐ. இதையடுத்து சிபிஐ தலைமையகம் வந்த கல்மாடியை, சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். அதன் பின்னர் அவர் முறைப்படி கைது செய்யப்பட்டார். நான்காவது முறையாக சிபிஐ விசாரணைக்கு கல்மாடி உட்படுத்தப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றன. அப்போது காமன்வெல்த் ஜோதி ஓட்டம், விளையாட்டு சாதனங்கள் வாங்கியது, கட்டுமானப் பணி என பல்வேறு பணிகளில் பெருமளவில் பல நூறு கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்தது தெரிய வந்து நாடே அதிர்ந்தது.
கல்மாடிக்கு எதிரான ஆதாரங்களை தீவிரமாக தேடி வந்தது சிபிஐ. இறுதியில் கல்மாடிக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து அவரைக் கைது செய்ய முடிவு செய்தது சிபிஐ.
கல்கமாடிக் கைது குறித்து பாஜக கருத்து தெரிவிக்கையில் மிகவும் தாமதமான நடவடிக்கை இது. இருப்பினும் இதை வரவேற்கிறோம் என்றனர்.