டிகேஎம் சின்னையா வசம் மரியம் பிச்சை வகித்த துறைகள்
திருச்சி: சாலை விபத்தில் மரணமடைந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சையின் உடல் இன்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகின்றது.
நேற்று காலை திருச்சி அருகே பாடாலூரில் நடந்த சாலை விபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை பரிதாபமாக உயிரிழந்தார்.
அமைச்சர் மரியம் பிச்சையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பரபரப்புத் தகவலை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதா அது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.
மரியம் பிச்சையின் உடல் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அங்கிருந்து சங்கிலியாண்டபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. பின்பு அவருக்கு சொந்தமான மரியம் தியேட்டரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பொது மக்கள் அஞ்சலி முடிந்த நிலையில் அங்கிருந்து முதலியார்சத்திரம், மேலப்புதூர் வழியாக பாலக்கரை என்.எம். பள்ளிவாசலுக்கு மரியம் பிச்சையின் உடல் கொண்டு வரப்பட்டு அங்கு இருக்கும் கபரஸ்தானில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.
விஜயகாந்த் இரங்கல்:
அமைச்சர் மரியம்பிச்சை சாலை விபத்தில் உயிரிழந்ததற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருச்சி மேற்கு தொகுதியில் இருந்து வெற்றி பெற்று சுற்றுச்சூழல் மற்றும் சிறுபான்மை நலப்பிரிவு துறை அமைச்சராக பொறுப்பேற்ற மரியம்பிச்சை அவர்கள் 23.5.2011 அன்று காலை அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்க கார் மூலம் வந்து கொண்டிருந்தபொழுது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
சாதாரண தொண்டனாக அ.தி.முகவில் தன்னை இணைத்துக் கொண்டு தனது கடுமையான உழைப்பினால் மாநகராட்சி மன்ற உறுப்பினராகவும், பின்னர் திருச்சி மாநகர மாவட்ட அ.தி.மு.க செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். இவர் மாற்றுக் கட்சியில் இருந்தாலும் திரைப்பட விநியோகஸ்தராகவும் இருந்தபோது இவரை நன்கு நான் அறிவேன். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். எந்தவிதமான ஆர்ப்பாட்ட அரசியலும் செய்யாமல் அமைதியாக தனது பணியை ஆற்றி வந்த 61 வயது நிரம்பிய மரியம்பிச்சை அவர்கள் அமைச்சர் பதவியை முழுமையாக அனுபவிக்க முடியாமல் மறைந்திருப்பது சொல்லொணாத் துயரத்தை அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் தே.மு.தி.க சார்பிலும், என் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மரியம்பிச்சையிடம் இருந்த துறைகள் சின்னையாவிடம்:
இந் நிலையில் மரியம் பிச்சை வகித்து வந்த சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு, வக்பு வாரியம் மற்றும் சிறுபான்மை நலத்துறைகள், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் டிகேஎம் சின்னையாவிடம் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
முதல்வரின் கோரிக்கைப்படி அவரிடம் இந்தத் துறைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.