மியான்மாரில் எஸ்.எம்.கிருஷ்ணா 3 நாள் சுற்றுப்பயணம்
டெல்லி: இந்திய வெளியுறவுத் துறை எஸ்.எம். கிருஷ்ணா இன்று மியான்மாருக்கு புறப்பட்டுச் சென்றார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று மியான்மார் புறப்பட்டுச் சென்றார். அவருடன் வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவும் சென்றுள்ளார்.
மியான்மார் வெளியுறவுத் துறை அமைச்சர் யூ. வான்னா மௌங்-கின் அழைப்பை ஏற்று தான் கிருஷ்ணா மியான்மார் சென்றுள்ளார். மியான்மாரில் இராணுவ ஆட்சி முடிந்து மக்களாட்சி மலர்ந்த பிறகு இந்தியாவில் இருந்து உயர்மட்ட அளவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது இது தான் முதன்முறை ஆகும்.
புறப்படும் முன்பு எஸ். எம். கிருஷ்ணா கூறியதாவது,
மியான்மாரில் உள்ள புது அரசுடனான உறவை பலப்படுத்த இந்த பயணம் உதவும். தொழில் நுட்பம், விவசாயம், தொலைத் தொடர்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை பற்றி அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறோம் என்றார்.
மியான்மர் அதிபர், துணை அதிபர், நாடாளுமன்றத் தலைவர் மற்றும் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஆகியோரை கிருஷ்ணா சந்திக்கவிருக்கிறார்.