ஜெயலலிதா மீது திமுக அரசு போட்ட 2 அவதூறு வழக்குகள் வாபஸ்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மீது திமுக அரசு போட்ட இரு அவதூறு வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகளை அவதூறு செய்யும் விதத்தில் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டதாகக் கூறி, அவருக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடரப்பட்டது.
வன்முறையைப் பயன்படுத்தி கள்ள ஓட்டுப் போட மத்திய, மாநில அரசு அதிகாரிகளே துணை போவதாக ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டதாகக் கூறி கடந்த ஏப்ரல் மாதம்
சென்னை மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் வழக்குத் தொடர்ந்தார்.
அதே போல தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான தினப்படியை, முதல்வர் கருணாநிதி குறைக்கச் சொன்னதாக ஜெயலலிதா கூறியதாக இன்னொரு அவதூறு வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்குகளில் ஜூன் 21ம் தேதி (இன்று) நேரில் ஆஜராகக் கூறி ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்துவிட்ட நிலையில் ஜெயலலிதா மீது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த இரு அவதூறு வழக்குகளும் நேற்று வாபஸ் பெறப்பட்டன.
இதற்கான மனுவை தற்போதைய சென்னை மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். நீதிபதி தேவதாஸ் முன் இந்த மனு மீதான விசாரணைக்கு வந்தது.
அப்போது அவதூறு வழக்குகளை வாபஸ் பெற நீதிபதி அனுமதி அளித்ததோடு இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்படுவதாகவும் அறிவித்தார்.
ஜெயக்குமார், ஓ.பி மீதான அவதூறு வழக்குகளும் வாபஸ்:
இந் நிலையில் சபாநாயகர் ஜெயக்குமார், அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன் மற்றும் மனோஜ் பாண்டியன் எம்.பி. ஆகியோர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளையும் வாபஸ் பெறுவதற்கு தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
இவர்கள் மீது திமுக ஆட்சியின் போது சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த 4 பேரும் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் அரசு துறைகள் இடம் மாற்றம் என்ற பெயரில் முக்கிய கோப்புகளை அழிக்க தி.மு.க. அரசு முயற்சி செய்ததாகவும், புனித ஜார்ஜ் கோட்டையில் மத்திய போலீசை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இந்த புகார் கருணாநிதியின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக கூறி அப் போதைய தமிழக அரசு சார்பில் இந்த 4 பேர் மீதும் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் 4 பேரும் நாளை ஆஜராக வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 27ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இந் நிலையில் இந்த 4 பேர் மீதான அவதூறு வழக்கை திரும்ப பெறுவதாக கூறி தமிழக அரசு சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் நாளை விசாரணைக்கு வருகிறது.