டாடாவின் ஸ்பெக்ட்ரத்தை நான் 'அபேஸ்' செய்யவில்லை- பல்வா

முறைகேடாக 2ஜி ஸ்பெக்ட்ரம் பெற்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பல்வா இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இன்று நடந்த இந்த வழக்கு விசாரணையின்போது பல்வாவின் வழக்கறிஞர் வாதாடுகையில்,
டெல்லி மண்டலத்தில் டாடா நிறுவனத்துக்கு தரப்பட இருந்த ஸ்பெக்ட்ரத்தை தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தனது ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு பல்வா பெற்றதாக சிபிஐ கூறும் குற்றச்சாட்டு தவறானது. இந்த ஸ்பெக்ட்ரம் முறைப்படி தொலைத் தொடர்புத்துறையால் ஒதுக்கப்பட்டது. இதில் பல்வா எந்த வகையிலும் தலையிடவில்லை.
டாடாவுக்கு ஏன் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்படவில்லை என்பது பல்வாவுக்குத் தெரியாது. இந்த விஷயத்தில் அப்போதைய அமைச்சர் ராசாவுடன் கூட்டு சேர்ந்து ஸ்பெக்ட்ரத்தை ஸ்வான் பெற்றதாகக் கூறுவது தவறு. டெல்லி மண்டலத்துக்கு ஒதுக்கப்படுவதற்காக இப்போது கூட 12 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் உள்ளது. இதில் டாடாவுக்கு 4.4 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் தான் தேவை. அதை டாடாவுக்கு வழங்க தொலைத் தொடர்புத்துறையை தடுப்பர் யார்?.
அப்படியே ஸ்பெக்ட்ரத்தை ஸ்வானுக்கு ஒதுக்கியதில் ஏதாவது தவறு நடந்திருந்தால் அதைச் செய்தது தொலைத் தொடர்புத்துறை தான். இதில் என்னை ஏன் கிரிமினல் குற்றவாளி ஆக்கியது சிபிஐ?.
2007ம் ஆண்டு மார்ச் மாதத்தில் Wireless Planning and Coordination wing (WPC) அப்போதைய அமைச்சர் ராசாவுக்கு அளித்த அறிக்கையில், டெல்லி மண்டலத்தில் ஸ்பெக்ட்ரமே காலி இல்லை என்று கூறியிருந்தது.
ஆனால், அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் திடீரென டெல்லி மண்டலத்தில் 15 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் காலியாக இருப்பதாக அறிக்கை தந்தது. திடீரென எங்கிருந்து வந்தது அந்த ஸ்பெக்ட்ரம்? என்றார் பல்வாவின் வழக்கறிஞர்.
டி.பி. ரியாலிட்டி எனப்படும் ரியல் எஸ்டேட் தொழில் நிறுவனம் நடத்தி வந்த பல்வா, திடீரென ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தைத் தொடங்கினார். தொடங்கிய உடனேயே அவருக்கு முக்கிய மண்டலங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ராசா ஒதுக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில், டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் துணை நிறுவனமான சினியுக் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி பணம் தந்ததும் தெரியவந்தது. இதையடுத்தே பல்வா, திமுக எம்பி கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications