ஊழல் புற்று நோயை ஒழித்திட வேண்டும்: சுதந்திரதின உரையில் பிரதீபா பாட்டீல் பேச்சு
சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,
நமது நாட்டின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு மற்றும் சமூக வாழ்க்கை முறையை ஊழல் இன்று ஒரு புற்றுநோயைப்போல் பாதித்து வருகிறது. இதை உடனடியாக ஒழிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அரசு, பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் சமூக அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.
ஒரே மருந்தில் அனைத்து நோய்களையும் தீர்க்க முடியாது என்பது போல், ஒரே வழிமுறையில் ஊழலை ஒழித்துவிட முடியாது. ஊழலுக்கு எதிராக தடுப்பு, தண்டனை, பகுத்தறிவுடன் கூடிய அணுகுமுறை போன்ற பல்வேறு நிலைகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நமது நாடு நிதானமான விவேகமான அறிவுடன் சிந்திக்கும் திறன் கொண்டது என்று போற்றப்பட்டு வருகிறது. சமஸ்கிருதத்தில் சொல்லப்பட்டு இருப்பது போல், அதீத செயல்களை தவிர்க்க வேண்டும்.
நாடாளுமன்றம் போன்ற ஜனநாயக அமைப்புகளின் நம்பகத்தன்மை, அவற்றின் செயல்முறைகளின் அடிப்படையில் அரசியல் அமைப்பின் வரைமுறைக்கு உட்பட்டு அமைந்துள்ளது. தேவைப்படும்போது சரியான நடவடிக்கை மூலம் அவற்றுக்கு திறமையும், வலிமையும் சேர்க்க வேண்டும். இதில் தொடர் முயற்சி மேற்கொள்ளாவிட்டால் அவற்றின் நம்பகத்தன்மை அழிந்துவிடும்.
நமது நாடாளுமன்றத்தில் சாதனைக்குரிய பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. நாடாளுமன்றத்தில் சுமூகமாக விவாதங்கள் நடைபெற வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகளை தீர்க்க நமது இளம் தலைமுறை எம்.பி.க்கள் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்கு உரியது.
இது போன்ற பிரச்சனைகளை அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஒன்றுபட்டு தீர்க்க வேண்டும். தூய்மையான ஆட்சி முறை, சுகாதாரமான செயல்பாடு ஆகியவற்றை அதிகரிக்க, தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதுபோல் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
நமது நாட்டின் மக்கள் தொகையில் 68 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையினர் நம்பி இருக்கும் விவசாயத்தில் நாம் அதன் முழு உற்பத்தி திறனை எட்டாமல் இருக்கிறோம். விவசாயத்தில் ஒரு புரட்சி ஏற்பட ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்கள் இதில் முன்னணி பங்கு வகிக்க வேண்டும். மக்கள் தொகையில் பெண்களின் விகிதம் குறைந்து வருவதற்கு காரணமான சமூக பாரபட்சங்களுக்கு எதிராக போராட வேண்டும். வரதட்சணை கொடுமை, குழந்தை திருமணம் மற்றும் பெண் சிசு கொலை போன்ற கொடுமைகளை விரட்டுவதற்கு போராட அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த நன்னாளில், அனைத்து குடிமக்களும் முழு அர்ப்பணிப்புடனும், உண்மையுடனும், பெருமையுடனும் பணியாற்ற உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.