சென்னையி்ல் மணக்கோலத்தில் உலா வந்து ஜைன துறவிகளான 6 மாணவ, மாணவிகள்
சென்னை: சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 3 பேரும், மாணவிகள் 3 பேரும் மணக் கோலம் பூண்டு ஊர்வலமாக வந்த பின் ஜைன துறவிகளாகியுள்ளனர்.
ஜைன மதத்தில் துறவறம் பூண்டு செல்வோருக்கு கடும் விதிமுறைகள் உள்ளது. துறவிகள் பணம் வைத்திருக்க கூடாது, ஆடம்பர உடை, செருப்பு, நகைகள் அணியக் கூடாது. எங்கு சென்றாலும் நடந்து தான் செல்ல வேண்டும். பிச்சை எடுத்து தான் சாப்பிட வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளது.
சென்னை, செளகார்பேட்டையில் ஜைன மதத்தினர் அதிகளவில் வசிக்கின்றனர். இந்த குடும்பங்களில் இருந்து அவ்வப்போது சிலர் துறவறம் செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று கல்லூரி மாணவிகளான பாயல் சாதியா, பூர்விசில்பட், ஜெயஸ்ரீ மற்றும் மாணவர்கள் ஹர்சித்சிப்பட், சுபாஹிதுகட், ககன்துகட் ஆகிய 6 பேரும் துறவறம் சென்றனர்.
முன்னதாக நேற்று நடந்த பிரிவு உபசார விழாவில் அந்த 6 பேரும் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மணமக்கள் கோலத்தில் ஊர்வலமாக வந்தனர். அவர்கள் உறவினர்களும் அடிப்பாடி அவர்களுடன் ஊர்வலமாக வந்தனர். அவர்களும் குதிரைகளில் இருந்து இறங்கி ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
ஜைன மத பக்தி பாடல்களை பாடி உற்சாகப்படுத்தினர். பெற்றோரால் தங்களுக்கு கொடுக்கப்பட்ட நகை, பணம் ஆகியவற்றை உடன் வந்தவர்களுக்கு அள்ளிக் கொடுத்தனர். அந்த பொருட்களை உடன் வந்தவர்கள் தங்களுக்கு கிடைத்த பொக்கிஷமாக வைத்து கொண்டனர்.
ஊர்வலத்தின் இறுதியில் வேப்பேரி சாலையில் உள்ள திடலில் தாங்கள் துறவறம் மேற்கொண்டதன் காரணம் குறித்து 6 பேரும் உரை நிகழ்த்தினர். இன்று காலை 7 மணிக்கு அனைத்து அலங்கார ஆடைகளையும் களைந்து நீராடினர். பின்னர் துறவிகளுக்கான வெள்ளை ஆடைகளை அணிந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசாதுமார்கி ஜெயின் சங்க தலைவர் உக்கம்சந்த், ரத்தன்லால் ரங்கா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.