ரூ.100 கோடி நில அபகரிப்பு: முன்னாள் சார் பதிவாளர் உள்பட 2 பேர் கைது
சென்னை: சென்னையி்ல் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி பட்டா மூலம் அபகரிக்க முயன்ற ஓய்வு பெற்ற சார்பதிவாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மடிப்பாக்கம் ராம்நகரைச் சேர்ந்த எபிதாமஸ் என்பவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க ஒரு கும்பல் முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து எபிதாமஸ் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்த பாண்டியராஜ் என்பவரின் மனைவி தங்கம் பாண்டியராஜுக்கு சென்னை அடையாறு போட்கிளப் ரோடு பகுதியில் டர்ன்புல்ஸ் ரோட்டில் 23 கிரவுண்டு இடம் சொந்தமாக உள்ளது. இதன் மதிப்பு ரூ.100 கோடியாகும். இந்த நிலத்துக்கு போலி பட்டா தயாரித்து ஒரு கும்பல் அபகரிக்க முயற்சித்துள்ளது.
போலி பட்டா மூலம் அந்த நிலத்தை விற்க முடியாமல் சிட்டி சிவில் நீதிமன்றத்திலும் அந்த கும்பல் தடை ஆணை வாங்கிவிட்டது. பின்னர் போலி பட்டா என்பது நிரூபிக்கப்பட்ட விவரம் தெரிய வந்ததன்பேரில் சிட்டி சிவில் நீதிமன்றம் அந்த தடை ஆணையை ரத்து செய்துவிட்டது. அரசு அதிகாரிகளின் கையெழுத்து போலியாக போட்டு, அரசு சீலையும் போலியாக தயாரித்த கும்பல் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அந்த கும்பல் ரூ.100 கோடி மதிப்புள்ள அந்த நிலத்தையும் அபகரிக்கப் பார்க்கிறது. அதையும் தடுத்து நிறுத்த வேண்டுகிறேன் என்று அவர் அதில் தெரிவி்த்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் சென்னை மாவட்ட கலெக்டர் அண்ணாமலை போலி பட்டா தயாரித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு சென்னை போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரைந்தார். கமிஷனர் திரிபாதியின் உத்தரவின் பேரில் அபிராமபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நவநீதகிருஷ்ணன், ராமவெங்கட் மற்றும் முன்னாள் சார்பதிவாளர் அப்துல்காதர் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதில் அப்துல்காதர், நவநீதகிருஷ்ணன்
ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ராமவெங்கட்டை போலீசார் தேடி வருகின்றனர்.