கும்மிடிப்பூண்டி கோவில் ரகசிய அறை திறப்பு- கல்லும், மண்ணும் மட்டுமே இருந்ததால் பக்தர்கள் ஏமாற்றம்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் உள்ள சந்திரசேகரேந்திரர் கோவிலில் இருந்த ரகசிய அறையில் மண்ணும், கற்களும் மட்டுமே இருந்ததால் பொக்கிஷத்தை எதிர்ப்பார்த்த மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், புது கும்மிடிப்பூண்டியில் சந்திரசேகரேந்திரர் கோவில் உள்ளது. இந்த கோவில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் இருந்த ரகசிய அறை திறக்கப்படாமல் இருந்தது. இந்த ரகசிய அறையில் பழங்கால பொக்கிஷம் இருப்பதாக நம்பப்பட்டது.
அந்த ரகசிய அறை திறக்கப்படாமல் இருப்பதால் பொக்கிஷம் கொள்ளையடிக்கப்பட வாய்ப்புள்ளது என்ற பயம் பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகளுக்கு ஏற்பட்டது. இதனையடுத்து இந்து அறநிலைத் துறை அதிகாரிகள் இந்த கோவில் ரகசிய அறையை திறந்து பார்க்க முடிவு செய்தனர்.
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் இருந்த ரகசிய அறைகள் திறந்த போது, பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல சந்திரசேகரேந்திரர் கோவில் ரகசிய அறையிலும் பொக்கிஷம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து இன்று காலையில் இந்து அறநிலைத் துறை அதிகாரிகள் முன்னிலையில் கோவில் ரகசிய அறை திறக்கப்பட்டது. ஆனால் அதில் கல்லும், மண்ணும் மட்டுமே இருந்தது. இதனால் ரகசிய அறையில் பொக்கிஷங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்த பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.