டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு இப்போதைக்கு இல்லை!

பெட்ரோல் விலையை பொதுத்துறை எண்ணை நிறுவனங்களே உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதித்தது. இதனால், கடந்த ஒரு ஆண்டில் 14 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. சமீபத்தில், நவம்பர் 4-ந் தேதி அன்று லிட்டருக்கு ரூ 1.80 உயர்த்தப்பட்டது. இதற்கு, அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. கூட்டணி கட்சியான திரிணாமுல் காங்கிரசும் எச்சரிக்கை விடுத்தது.
இதற்கிடையே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்ததால் நவம்பர் 16-ந் தேதி அன்று லிட்டருக்கு ரூ.2 வரை பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது.
எனினும், சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் நஷ்டம் ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து புலம்பி வருகின்றன.
தினமும் ரூ.360 கோடி
இந்த நிலையில், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு தினமும் ரூ.360 கோடி இழப்பு ஏற்படுகிறது. பெட்ரோல் தவிர, மற்ற பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணய கட்டுப்பாடு மத்திய அரசிடமே உள்ளன. எனவே, டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையும் விரைவில் உயர்த்தப்படும் என தகவல்கள் வெளியாகின.
மத்திய பெட்ரோலியத் துறையின் அனுமதியுடனேயே பெட்ரோல் விலை உயர்வும் விலை குறைப்பும் அரங்கேறின. பெட்ரோல் விலை உயர்வு விவகாரத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டதால், டீசல் விலை உயர்வு திட்டத்தை மத்திய அரசு தற்போது கைவிட்டுள்ளது. இந்த தகவலை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
விலை உயர்வு இப்போதைக்கு இல்லை
இது குறித்து அவர் கூறுகையில், "அடுத்த வாரம் 22-ந் தேதி அன்று பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்க இருக்கும் சூழ்நிலையில், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்துவது என்பது தற்கொலைக்கு சமமாகும். எனவே, அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை. பெட்ரோல் விலை உயர்வு மற்றும் விலை குறைப்பு ஆகிய இரண்டு முடிவுகளுமே பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டவை.
அரசியல் கண்டனம் காரணமாகவே பெட்ரோல் விலை உயர்வு திரும்பப் பெறப்பட்டது. எனினும், விலை உயர்வை அறிவிக்கும் முன்பு எண்ணெய் நிறுவனங்கள் சிறிது பொறுமை காத்திருக்கலாம். லிட்டருக்கு ரூ.1.52 இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்தன. 10 நாட்கள் பொறுத்திருந்தால் நிலைமை மாறி இருக்கும். அதே நேரத்தில், லாபம் ஏற்பட்டால் அதை பொதுமக்களுடன் எண்ணெய் நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ளும்," என்றார்.












Click it and Unblock the Notifications