நில அதிர்வால் முல்லைப்பெரியாறு அணையில் விரிசல்- கேரள முதல்வர் உம்மன் சாண்டி
திருவனந்தபுரம்: கடந்த 2 நாட்களுக்கு முன்பு இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நில அதிர்வால் முல்லைப்பெரியாறு அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 2 முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதி்வானது. இந்த நில அதிர்வால் இடுக்கி மாவட்டத்தில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனால் முல்லைப்பெரியாறு அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த விரிசல் வழியாக தண்ணீர் அதிகளவு கசிவதாகவும் கேரள நீர்பாசன துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று முன்தினம் கேரள நீர்பாசன துறை நிர்வாகப் பொறியாளர் டோமி ஜார்ஜ் தலைமையிலான அதிகாரிகள் அணைக்கு சென்று சோதனை நடத்தினர்.
பின்னர் டோமி ஜார்ஜ் அளித்த பேட்டியில் கூறுகையில், நில அதிர்வால் அணையில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. இருந்தாலும் இது குறித்து தீவர ஆய்வு நடத்த வேண்டும் என்றார்.
நேற்று கேரள நில அளவியல் துறை அதிகாரிகளும் அணையில் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் கொச்சியில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி அளித்த பேட்டியில் கூறியதாவது,
முல்லைப்பெரியாறு அணையில் நில அதிர்வால் புதிதாக ஏற்பட்ட விரிசலில் இருந்து நீர்கசிவு ஏற்பட்டு இருப்பது கவலை அளிக்கிறது. அதே நேரம் இதனால் பெரிய அளவில் பிரச்சனை ஏற்படாது என்றே அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே, மக்கள் இதுபற்றி அச்சப்பட தேவையில்லை.
அணையின் தற்போதைய சூழ்நிலை குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன். இதற்காக வருவாய் துறை அமைச்சர் திருவாங்கூர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் குழு அணை பகுதிக்கு நாளை சென்று பார்வையிட உள்ளது. இக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.