கண்ணதாசன் அண்ணன் மகன் கண்ணப்பனின் ரூ. 100 கோடி நிலம் அபகரிப்பு
சென்னை: சென்னையில் கவியரசு கண்ணதாசனின் அண்ணன் சீனிவாசனின் மகன் கண்ணப்பனுக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக ரியல் எஸ்டேட் அதிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கண்ணதாசனின் அண்ணன் சீனிவாசனின் மகன் ஏஎல்எஸ் கண்ணப்பன். இவர் திரைப்படத் தயாரிப்பாளராக இருந்தவர். சில ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்து விட்டார். இவரது மனைவி ஜெயந்தி. இவர் கோபாலபுரம் ரத்னசெட்டி தெருவில் வசித்து வருகிறார்.
கண்ணப்பனுக்கு சென்னையில் பூர்வீக சொத்துக்கள் நிறைய உள்ளன. இவருடைய தாத்தா வெள்ளையப்பச் செட்டியாருக்குச் சொந்தமான 1500 ஏக்கர் நிலம் அயனாவரம், பெரம்பூர் பகுதிகளில் உள்ளது. இதில் பெரும் பகுதியை அரசுக்குக் கொடுத்து விட்டனர். இதுபோக கொன்னூர் நெடுஞ்சாலையில் செட்டித்தோட்டம் என்றஇடத்தில் 90 கிரவுண்ட் காலி நிலம் உள்ளது. இங்கு போலீஸ் நிலையம், குடிநீர் வடிகால் வாரிய சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை செயல்படுகின்றன.
இந்த இடத்திற்கு கடந்த 4 மாதத்திற்குமுன்பு வில்லங்க சான்றிதழை போட்டுப் பார்த்தார் ஜெயந்தி. அப்போது தனது பெயருக்குப் பதில் அபிபுல்லா என்பவரின் பெயர் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து தனக்குச் சொந்தமான நிலம் அபகரிக்க்கப்பட்டிருப்பதாக போலீஸில் புகார் கொடுத்தார் ஜெயந்தி. அதன் மதிப்பு ரூ. 100 கோடி என்றும், அதை அபிபுல்லா என்பவருக்கு மோசடியாக விற்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்த ஆணையர் ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டார். விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டை சேர்ந்த விக்டர்ராஜ் என்பவர், போலி ஆவணம் தயாரித்து ரூ.100 கோடி மதிப்புள்ள 42 கிரவுண்ட் நிலத்தை புரசைவாக்கத்தில் ஜவுளிக்கடை நடத்தி வரும் அபிபுல்லாவுக்கு கடந்த ஆண்டு ரூ.13 கோடிக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
ஜவுளிக்கடை அதிபருக்கு விற்கப்பட்ட அந்த 42 கிரவுண்ட் இடத்தில் அயனாவரம் போலீஸ் நிலையமும், குடிநீர் வாரிய சுத்திகரிப்பு நிலையமும் அடங்குகிறது.
இந்த மோசடியில் ஈடுபட்ட விக்டர் ராஜுவை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, வெள்ளையப்ப செட்டியாரின் மகன் லட்சுமணன், அவரது மகன் எல்.கண்ணப்பன் தனக்கு அந்த இடத்தை விற்க பவர் எழுதி கொடுத்துள்ளதாக என்று விக்டர்ராஜு தெரிவித்துள்ளார். இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கண்ணப்பன் யார், அவர் உயிருடன் இருக்கிறாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அபிபுல்லா மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.