தமிழக அரசின் எந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லையாம்?- காங். கேள்வி
சென்னை: தமிழக அரசின் எந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று ஒரு உதாரணம் கூறட்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.
சென்னை வந்த சிங்வி அங்கு காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் துவங்கிய முதல் நாளே அதை நடத்த விடாதபடி முடக்கும் வகையில் பாஜக தலைமையிலான எதிர்கட்சிகள் நடந்து கொண்டதை வன்மையாக கண்டிக்கிறேன். அவர்கள் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் விரோதமாக நடக்கிறார்கள். ஒரு மூத்த அமைச்சரை( ப. சிதம்பரத்தை) திரும்பப் பெறும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம் என்று அவர்கள் சொல்வதை எப்படி ஏற்க முடியும்.
பாஜகவும், இடதுசாரிகளும் கைகோர்த்துள்ளது ஒன்றும் புதிதன்று. அவர்கள் கடந்த 1977களிலேயே இதுபோல் ஒன்று சேர்ந்து செயல்பட்டுள்ளனர். அவர்கள் நாட்டை ஏமாற்ற நினைக்கின்றனர்.
சுப்பிரமணிய சாமியும் 2ஜி ஊழலில் ப. சிதம்பரத்திற்கு எதிராக ஒரு உத்தரவை பெற்றுவிட வேண்டும் என்று கடந்த 6 மாதமாக நீதிமன்றத்தில் வாதாடுகிறார். நீதிமன்றத்தில் நடப்பதை எல்லாம் வெளியே வந்தவுடன் ஊடகங்களிடம் தெரிவித்துவிடுகிறார். அவரிடம் ஆதாரங்கள் இருப்பின் அவற்றை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும்.
லோக்பால் கமிட்டி அதிவேகமாக செயல்பட்டு வருவதைப் பார்க்கையில் ஆச்சரியமாக உள்ளது. அவர்களின் வேகத்தைப் பார்த்தால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கரம் லோக்பால் மசோதா நிறைவேறும்.
மத்திய அரசு தமிழகத்திற்கு போதிய நிதி வழங்கவில்லை என்பது தவறு. 100 நாள் வேலை திட்டம் முதலில் காங்கிரஸ் அல்லாத மாநிலங்களில் தான் துவங்கப்பட்டது. தமிழக அரசின் எந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று கூறட்டும். அவ்வாறு கூறினால், மாநில அரசுடன் தமிழக காங்கிரஸ் தலவைவரும் சேர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பார்.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை மனிதநேயப் பிரச்சனையாகப் பார்க்கிறோம். அவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டுகிறார்களா, இல்லையா? என்பதைப் பார்க்காமல் அவர்கள் தாக்கப்படுவதை தடுத்துத் நிறுத்தத் தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் இலங்கை அரசை வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.
தனிப்பட்ட ஆதாயத்திற்காக கூடங்குளம் விவகாரத்தை அரசியலாக்கி பரபரப்பு ஏற்படுத்துகிறார்கள். உச்சக்கட்ட பாதுகாப்பு தான் மத்திய அரசின் குறிக்கோள். அப்படி இருக்கையில் பாதுகாப்பு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதையோ, விவாதம் செய்வதையோ ஏற்றுக் கொள்ள முடியாது.
கூடங்குளத்தில் போராட்டத்தை தூண்டுவிடுவது யார்? நிதி எங்கிருந்து வருகிறது? என்பது பற்றி விமர்சிக்க நான் விரும்பவில்லை. இந்தியா வலிமையாக இது போன்ற அணுமின் நிலையங்கள் தேவை. கூடங்குளம் அணுமின் நிலையத்தால் அதிக பயனடையப்போவது தமிழகம் தான்.
திமுகவுடன் நாங்கள் நீண்டகாலமாக கூட்டணி வைத்துள்ளோம். மத்தியில் காங்கிரஸ், திமுக உறவு வலுவாக உள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கத்தை வளர்க்கும் முயற்சில் இறங்கியுள்ளோம். அது வேறு, இது வேறு என்றார்.
சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த அபிஷேக் சிங்விக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். ராஜ்யசபாவில் எனது நீண்ட கால நண்பரான ஞானதேசிகன் தமிழக காங்கிரஸ் தலைவராகியிருப்பதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சிங்வி தெரிவித்தார்.