2வது மனைவி கொடுத்த புகார்-அமைச்சர் பரஞ்சோதி மீது வழக்கு தொடர போலீஸ் முடிவு
திருச்சி: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மு.பரஞ்சோதி மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி கோரி திருச்சி மாநகர போலீஸ் சார்பில் சபாநாயகருக்கு கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரது 2வது மனைவி கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கைத் தொடர காவல்துறை தீர்மானித்துள்ளது.
திருச்சி பெண் மருத்துவர் கொடுத்த மோசடிப் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து போலீசார் இந்ந டவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் சட்டம்- சிறை மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பரஞ்சோதி மீது, திருச்சி திருச்சி குமரன் நகரை சேர்ந்த டாக்டர் ராணி என்பவர் மோசடி மற்றும் மிரட்டல் புகார் கொடுத்துள்ளார். அதில் அமைச்சர் பரஞ்சோதி தனது 2வது கணவர் என்றும், அவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக 10 லட்சம் ரூபாயையும் தன்னுடைய 70பவுன் நகையையும் பறித்து கொண்டார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ரூ.2.5லட்சம் மதிப்புள்ள காலி மனையையும் அபகரித்து கொண்ட பரஞ்சோதியை போனில் தொடர்பு கொண்ட போது மிரட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.
திருச்சி நீதிமன்றம் உத்தரவு
இது குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இதனையடுத்து கடந்த நவம்பர் 11ம் தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 4ல் டாக்டர் ராணி புகார் மனு அளித்தார். அமைச்சர் பரஞ்சோதி மீது தான் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் புஷ்பராணி, பரஞ்சோதி மீதான புகார் தொடர்பாக திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
நீதிமன்றம் அளித்துள்ள கெடு முடிய இன்னும் 8 நாட்களே உள்ளநிலையில் அமைச்சர் பரஞ்சோதி மீது வழக்கு பதிவு செய்வது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்து, உதவி கமிஷனர் வீராசாமி ஆகியோர் அரசு வக்கீல்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
சபாநாயகரிடம் அனுமதி
பொதுவாக எந்த ஒரு எம்எல்ஏ மீதும் வழக்கு பதிவு செய்வதற்கு முன்னர் முறையாக சபாநாயகரிடம் அனுமதி பெறவேண்டும். அதன் அடிப்படையில் பரஞ்சோதி மீது வழக்கு பதிவு செய்ய அனுமதியளிக்க கோரி சபாநாயகருக்கு கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.