தேனி, கேரளா போக்குவரத்து ஸ்தம்பிப்பு- ஒரு வண்டியும் வரவில்லை, போகவில்லை- தொழிலாளர்களும் போகவில்லை

மேலும் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் ஒரு வாகனமும் இந்த வழியாக போகவில்லை, வரவும் இல்லை. கேரள ஏலக்காய் தோட்டங்களில் பணியாற்றி வரும் தமிழக தொழிலாளர்களும் ஒருவர் கூட வேலைக்குப் போகவில்லை. இதனால் இடுக்கி மாவட்டத்துக்கும், தமிழகத்திற்கும் இடையிலான தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை சில அரசியல் கட்சிகள் தூண்டி விட்டு வருவதால் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் சிலர் தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் குதித்துள்ளனர். தமிழகத்தில் கேரள மக்களுக்கு எதிராக ஒரு சம்பவம் கூட நடைபெறாமல், தமிழக மக்கள் மிகப் பொறுமையுடனும், பொறுப்புடனும் நடந்து வரும் நிலையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தமிழர்களைத் தாக்குவது, வாகனகங்களைத் தாக்குவது, ஐயப்ப பக்தர்களைத் தாக்குவது என்று அடாவடி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள, தமிழக எல்லையில் உள்ள குமுளியில் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்தவண்ணம் உள்ளன. இதையடுத்து அங்கு நேற்று இரவு முதல் 144 தடை உத்தரவை இடுக்கி மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளார்.
இதன் மூலம் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள், கூட்டமாக சேருவது, ஊர்வலம் போவது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன.
குமுளி வழியாக வாகனங்கள் செல்லத் தடை
இந்த நிலையில் குமுளி வழியாக தமிழக வாகனங்கள் செல்வதற்கு தமிழக போலீஸார் தடை விதித்துள்ளனர். தமிழக வாகனங்களும், தமிழர்களும் தாக்கப்படுவதால், குமுளி வழியாக ஒரு வாகனமும் அனுமதிக்கப்படவில்லை.
பழனி சென்று பாலக்காடு வழியாகப் போகுமாறு ஐயப்ப பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். குமுளிக்கு இன்று காலை முதல் ஒரு தமிழக வாகனமும் போகவில்லை. அதேபோல அங்கிருந்தும் ஒரு வாகனமும் வரவில்லை.
கம்பத்தில் கடையடைப்பு
கேரளாவின் போக்கைக் கண்டித்து கம்பத்தில் இன்றும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. எந்தக் கடையும் திறக்கப்படவில்லை. மேலும் கேரளத்தினர் நடத்தி வரும் கடைகளும் மூடப்பட்டு விட்டன. அந்தக் கடைகளின் உரிமையாளர்கள் கேரளாவுக்குப் போய் விட்டனர்.
ரூ. 6 கோடி வர்த்தகம் பாதிப்பு
கேரளாவுக்கு தேனி மாவட்டத்திலிருந்து ஒரு நாளைக்கு ரூ. 6 கோடிக்கும் மேலான வர்த்தகம் நடைபெறுகிறது. தேனி மாவட்டத்தையொட்டியுள்ள பல்வேறு கேரள பகுதிகளுக்கும் தேவையான பொருட்களில் 90 சதவீத அளவுக்கு தேனி மாவட்டத்திலிருந்துதான் போகிறதாம்.
மேலும் தேனி மாவட்டத்தையொட்டியுள்ள கேரளப் பகுதிகளில் ஏலக்காய் தோட்டங்கள் அதிகம். இங்கு பணியாற்றும் தொழிலாளர்களில் 90 சதவீதம் பேர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்கள். தற்போதைய பதட்டத்தைத் தொடர்ந்து இந்தத் தொழிலாளர்கள் யாரும் கேரளாவுக்குப் போகவில்லை, போகவும் தயாராக இல்லை.
ஒரு பஸ்ஸும் ஓடவில்லை
அரசு பஸ்களும் போகவில்லை, தனியார் பஸ்களும் போகவில்லை. அதேபோல கேரளாவிலிருந்தும் ஒரு வாகனமும் வரவில்லை. ஐயப்ப பக்தர்கள் பழனி வழியாகவும், செங்கோட்டை வழியாகவும் போகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தத் தடை காரணமாக தேனி மாவட்டம் வழியாக தமிழகத்திற்கும், கேரளாவுக்கும் இடையிலான தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் கோவை மாவட்டம் வாலையாறு, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை ஆகிய எல்லைப் பகுதிகளில் பிரச்சினை இல்லை.












Click it and Unblock the Notifications