4வது முறை அமைச்சரவை மாற்றம்: பரஞ்சோதி, செல்வி ராமஜெயத்துக்கு 'கல்தா'-வளர்மதி, ஆனந்தனுக்கு பதவி

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகையில் 12-ந் தேதி (திங்கட்கிழமை) புதிய அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்.
முதல்வர் ஜெயலலிதா ஆலோசனையின் பேரில் 2 அமைச்சர்களை நீக்கிவிட்டு, புதிதாக 2 அமைச்சர்களை நியமிக்க கவர்னர் ரோசய்யா ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக கவர்னர் மாளிகை நேற்றிரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை, சட்டம், நீதித்துறை, சிறைத்துறை அமைச்சராக இருந்த எம்.பரஞ்சோதி, சமூக நலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.
திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பா.வளர்மதி ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இலாகாக்கள்
அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுவரை அமைச்சர் பரஞ்சோதி வகித்து வந்த, தமிழ் ஆட்சிமொழி, தமிழ் கலாசாரம், சட்டம், சிறைத்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம், லஞ்ச ஒழிப்பு ஆகிய துறைகள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் ஒதுக்கப்படுகின்றன.
அவர் ஏற்கனவே பள்ளிக் கல்வியுடன் கூடுதலாக தொல்லியல் துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் ஆகிய துறைகளையும் கவனித்து வருகிறார். இனிமேல், அமைச்சர் சி.வி.சண்முகம், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், சட்டம், நீதித்துறை, சிறைத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
பா.வளர்மதி
அமைச்சர் செல்வி ராமஜெயம் கவனித்து வந்த மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் உள்ளடக்கிய சமூக நலம், அனாதைகள், சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாடு, பிச்சைக்காரர்கள் விடுதி, மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் சமூக சீர்திருத்தங்கள் ஆகிய இலாக்காக்கள் பா.வளர்மதிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. அவர் சமூக நலத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா கவர்னர் மாளிகையில் 12-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முதல்வரின் இணைச் செயலர் மாற்றம்:
அதே போல தமிழக முதல்வரின் இணைச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழக முதல்வரின் இணைச் செயலராக பணியாற்றிய, ரீட்டா ஹரிஷ் தாக்கர் மாற்றப்பட்டு, தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பணியில் இருந்த, வள்ளலார் ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications