அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டால் மன்னிப்பே கிடையாது - ஜெ கடும் எச்சரிக்கை
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நேற்று ஜெயலலிதா இதுகுறித்து பகிரங்கமாக விடுத்த எச்சரிக்கை:
அரசியல்வாதிகளில் பலவிதம் உண்டு. கட்சிக்காரர்களும் பலவிதம் உண்டு. சிலர் தவறு செய்கிறார்கள். குற்றம் புரிகிறார்கள். அதனால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியை விட்டு நீக்கப்படுகிறார்கள்.
அப்படி நீக்கப்படும் போது ஒரு சிலர் சரி நாம் தவறு செய்துவிட்டோம், ஆகவே இது நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்டனை தான். இனிமேல் நமக்கு அரசியல் வேண்டாம், இருப்பதை வைத்துக்கொண்டு அமைதியாக இருப்போம் என்று சிலர் முடிவெடுப்பார்கள். இன்னும் சிலர், சரி நம்மை இந்த கட்சியை விட்டு நீக்கிவிட்டார்கள், வேறு கட்சியில் போய் சேர்ந்துவிடலாம், தொடர்ந்து அரசியல் நடத்தலாம் என்று முடிவெடுப்பார்கள். அதில் தவறேதுமில்லை.
வாழ்க்கை இருக்கின்றவரை வாழ்ந்தாக வேண்டும். ஒரு கட்சியில் இல்லாவிட்டாலும் இன்னொரு கட்சியில் சேருவதில் தவறில்லை. இந்தக் கட்சியில் இனிமேல் அவர்களுக்கு இடமில்லை என்று நீக்கிய பின்பு, வேறு கட்சியில் அவர்கள் போய் சேருவது தவறு என்று சொல்ல முடியாது. அப்படி முடிவெடுப்பவர்கள் ஒரு சிலர் உண்டு.
மன்னிப்பே கிடையாது...
ஆனால், இன்னும் சிலர் இருக்கிறார்கள். தவறு செய்து, துரோகம் புரிந்து கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும், அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களை விடாப்பிடியாக தொடர்புகொண்டு நாங்கள் மீண்டும் உள்ளே சென்றுவிடுவோம், நாங்கள் மீண்டும் செல்வாக்குடன் இருப்போம், இப்போது எங்களை பகைத்துக் கொண்டால் நாளை நாங்கள் மீண்டும் உள்ளே சென்ற பிறகு உங்களை பழிவாங்கிவிடுவோம், ஆகவே எங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள் என்று சொல்பவர்களும் உண்டு.
அப்படி தலைமை மீது சந்தேகம் வருகின்ற அளவுக்கு பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அதுமட்டுமல்ல, அத்தகையவர்களுடைய பேச்சைக் கேட்டு நம்பி, அதன்படி செயல்படுகின்ற கட்சிக்காரர்களுக்கும் மன்னிப்பு கிடையாது," என்றார் ஜெயலலிதா.