கூடங்குளத்தில் வெடித்த அணு மின் எதிர்ப்புப் போராட்டம்!
தமிழகம் 2011ம் ஆண்டு கண்ட மாபெரும் போராட்டங்களில் ஒன்று கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டம்.
ஜப்பானின் புகுஷிமா அணு உலை வெடிப்புக்குப் பின்னர் கூடங்குளத்தில் அதன் பாதிப்பு எதிரொலிக்க ஆரம்பித்தது.
ரஷ்ய உதவியுடன் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் கட்டப்பட்ட அணு மின் நிலையம் எங்களுக்கு வேண்டாம், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்த அணு மின் நிலையத்தை மூட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மீனவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட கிராம மக்களைத் திரட்டி கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழு அதன் தலைவர் உதயக்குமார் தலைமையில் இடிந்தகரையில் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் மத்திய அரசின் தலையில் இடியை இறக்குவதாக அமைந்தது.
மாதக்கணக்கில் தொடர்ந்த அந்த உண்ணாவிரதப் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எத்தனையோ சமாதானங்களைச் சொல்லியும் போராட்டக்காரர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. அணு உலை வேண்டாம், மூடி விடுங்கள் என்பதே அவர்களின் ஒற்றை கோரிக்கையாக உள்ளது.
இதையடுத்து தமிழக அரசு செப்டம்பர் 21ம் தேதி தனது அமைச்சரவையைக் கூட்டி மக்களின் அச்சம் தீரும் வகையில் அணு மின் நிலையப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குக்கோரிக்கை விடுத்து தீர்மானம் போட்டது.
இதைத் தொடர்ந்து அக்டோபர் 7ம் தேதி மாநில அரசுக் குழுவும், போராட்டக் குழுவும் இணைந்து பிரதமரைச் சந்தித்துப் பேசின. அதில் உடன்பாடு ஏற்பட்டது போல தெரிந்தாலும் மீண்டும் போராட்டம் தொடர்ந்தது.
இறுதியாக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை விட்டு அணு உலை பாதுகாப்பாக உள்ளதாக மத்திய அரசு அறிவிக்க வைத்தது. அதிலும் போராட்டக் குழுவினர் சமாதானமாகவில்லை.
இன்னும் தீர்வு காணப்படாமல் நீண்டு கொண்டிருக்கும் கூடங்குளம் போராட்டம் எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை. 2012ல் ஏதாவது ஒரு வழி பிறக்கும் என்று நம்பலாம்.