எரிவாயு டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் உறுதி-எரிவாயு சப்ளை பாதிக்கும்?
சென்னை: புதிய வாடகை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, அறிவித்தபடி ஜனவரி 12 முதல் எரிவாயு டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. இதனால் சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
ஒப்பந்தப்படி புதிய லாரிகளுக்கு பணி ஆணை வழங்கவேண்டும், கடந்த ஆண்டு போடப்பட்ட புதிய வாடகை ஒப்பந்தத்தை எண்ணெய் நிறுவனங்கள் நிறைவேற்ற வேண்டும் என்பது எரிவாயு லாரி உரிமையாளர்களின் கோரிக்கை. இதனை நிறைவேற்றாவிட்டால் ஜனவரி 12 ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் கோரிக்கைகள் தொடர்பாக லாரி உரிமையாளர்கள், எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் சென்னையில் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இருதரப்பினரும் இன்றும் பேச்சுவார்த்தை நடத்தினர் அதில் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை அடுத்து திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொடங்கும் என்று டேங்கர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்தினால் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் அதிகமான லாரிகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக எரிவாயு சிலிண்டர்களின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.