சென்னை சூளைமேட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு நானே பொறுப்பேற்கிறேன்-டக்ளஸ் தேவானந்தா
கொழும்பு:1986ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கும், அதில் ஒருவர் கொல்லப்பட்டதற்கும் நானே பொறுப்பேற்கிறேன் என்று கூறியுள்ளார் இலங்கையில் அமைச்சராக காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் டக்ளஸ் தேவானந்தா.
முன்பு போராளியாக இருந்தவர் இந்த டக்ளஸ். இபிஆர்எல்எப் எனப்படும் ஈழம் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவராக இருந்தார். இலங்கையில் விடுதலைப் புலிகளின் வளர்ச்சியைத் தாக்குப் பிடிக்க முடியாமல் சென்னைக்கு ஓடி வந்தார் டக்ளஸ்.
அப்போது 1986-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி சென்னை சூளைமேட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த இ.பி.ஆர்.எல்.எப்.பைச் சேர்ந்தவர்களுக்கும், பொது மக்களுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது இ.பி.ஆர்.எல்.எப்.பைச் சேர்ந்தவர்கள் சுட்டதில் வாலிபர் ஒருவர் பலியானார். 4 பேர் காயம் அடைந்தனர்.
இது தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவும் அவருடைய கூட்டாளிகள் 9 பேரும் கைதானார்கள். அவர்கள் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். பிறகு டக்ளஸ் தேவானந்தா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில், 1988-ம் ஆண்டு சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பணக்கார வீட்டு சிறுவன் ஒருவனை கடத்திச் சென்று டக்ளஸ் பல லட்சம் ரூபாய் பறிக்க முயன்றார். போலீசார் அந்த சிறுவனை மீட்டதோடு டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்தனர்.
சென்னை போலீசில் டக்ளஸ் மீது மீண்டும் வழக்கு பதிவானது. இதற்கிடையே டக்ளஸ் கொலை முயற்சி ஒன்றிலும் ஈடுபட்டார். இப்படி, கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், பணம் பறித்தல் என தொடர்ந்து டக்ளஸ் ஈடுபட்டு வந்த நிலையில், அவர் இலங்கைக்கு தப்பி ஓடி விட்டார். அங்கு போய் விடுதலைப் புலிகளுக்கு எதிராக, ஆள் காட்டியாக சிங்களர்களுடன் இணைந்து வாழ ஆரம்பித்தார். அதன் பயனாகத்தான் தற்போது அமைச்சர் பதவியைப் பிச்சை போட்டுள்ளார் ராஜபக்சே.
தற்போதும் சென்னை காவல் நிலையங்களில் உள்ள வழக்குகள் உயிருடனேயே வைக்கப்பட்டுள்ளன. அவர் தேடப்படும் குற்றவாளியாகவும அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் சென்னை பக்கமே திரும்பிப் பார்க்காமல் இலங்கையிலேயே பதுங்கியிருக்கிறார் டக்ளஸ்.
இந்த நிலையில் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சூளைமேட்டில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு நான் தார்மீக பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன். துப்பாக்கி சூட்டை நடத்தியது இ.பி.ஆர்.எல்.எல்.பைச் சேர்ந்தவர்கள் என்பதால், அதற்கு நான் தான் பொறுப்பாகும்.
சென்னை போலீஸ் நிலையங்களில் உள்ள அந்த வழக்குகளை சட்டப்படி சந்திக்க நான் தயாராக உள்ளேன். ஆனால் இந்த பழைய விவகாரத்தை சிலர் அரசியல் லாபத்துக்காக மீண்டும் கிளப் பியுள்ளனர் என்று திடீர் ஞானோதயம் வந்தவர் போல பேசியுள்ளார் டக்ளஸ்.