பிப் 21-ல் 'முதல்வர் தரிசன பேரணி!' - கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அறிவிப்பு
சென்னை: அரசு கேபிள் டி.வி.யை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த வலியுறுத்தி கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அடுத்த மாதம் (மார்ச்) 21-ந் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடத்துகிறார்கள்.
இந்தத் தகவலை கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்க தலைவர் பி.சகிலன் தெரிவித்துள்ளார்.
தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்க உயர்மட்ட குழு கூட்டம் சென்னையில் சங்கத்தின் மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் சகிலன் கூறுகையில், "அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் நிறுவனம் தொடங்கி 5 மாதங்கள் ஆகியும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் தலைநகரங்களில் மட்டுமே அரசு கேபிள் டி.வி. செயல்பாடு உள்ளது.
அரசு கேபிள் டி.வி. தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி கிராமங்கள் வரை செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு பராமரிப்பு செலவினங்களை ஈடுகட்ட ஒரு இணைப்புக்கு அடிப்படை கட்டணமாக மாதம் ரூ.100 ஆக அறிவிக்கவேண்டும். ஏகபோக நிறுவனங்களின் சூழ்ச்சியை முறியடித்து கடைநிலை கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை பாதுகாக்கவேண்டும்.
கோட்டையை நோக்கி பேரணி
தானே புயலால் பாதிக்கப்பட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு மறுசீரமைப்புக்காக சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான கேபிள் டி.வி. சாதனங்களை நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவேண்டும். அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய மாத கட்டணத்தை சுமார் ஒரு வருடங்களுக்கு கடலூர், விழுப்புரம் மாவட்ட ஆபரேட்டர்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 'முதல்வர் தரிசன பேரணி' அடுத்த மாதம் (மார்ச்) 21-ந் தேதி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து கோட்டையை நோக்கி பேரணி நடைபெறுகிறது," என்றார்.












Click it and Unblock the Notifications