'என்கவுன்டர் பற்றி தமிழக போலீஸார் சொல்வதில் முரண்பாடுகள் உள்ளன'- பீகார் முதல்வர் நிதீஷ் குமார்
இந்த விசாரணையை பீகார் மாநில டிஜிபி தலைமையிலான போலீசார் மேற்கொள்வார்கள்.
சென்னை வேளச்சேரியில் என்கவுன்டர் செய்யப்பட்ட 5 வங்கிக் கொள்ளையர்களில் 4 பேர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தமிழக காவல்துறை அறிவித்தது.
மேலும் கொல்லப்பட்ட இளைஞர்கள் பணத்தை பீகாரில் பதுக்கி வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால், பீகாருக்கே போய் விசாரணை மேற்கொள்ள தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த விவகாரம் பீகார் சட்டசபையிலும் எதிரொலித்தது. பீகார் மாநில கால்நடைத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், "இந்த விவகாரத்தை மாநில அரசு மிகவும் சீரியசாக எடுத்துக் கொண்டுள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு தமிழக் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளோம்" என்றார்.
பின்னர் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறுகையில், "சென்னையில் என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ள பட்டியல் தவறானது. தமிழக போலீசார் முன்னுக்குப் பின் முரணாகக் கூறுகிறார்கள். மேலும் கொல்லப்பட்டதாக சொல்லப்படும் சிலர் பீகாரில் உயிருடன் இருக்கிறார்கள். இந்த என்கவுன்டர் குறித்து தொடர்ந்து தகவல் சேகரித்து வருகிறோம்.
முறையாக விசாரணை நடத்துமாறு மாநில டிஜிபி அபயானந்துக்கு உத்தரவிட்டுள்ளேன். உள்துறை அதிகாரிகளும் இந்த விசாரணையில் பங்கெடுப்பார்கள்," என்றார்.