வோடபோன் வழக்கு - மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
வோடபோன் என்ற பெயரில் இந்தியாவில் தொலைத் தொடர்பு வர்த்தகம் செய்யும் ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த ஹட்சிசன்-எஸ்ஸார் நிறுவனத்தின் 67 சதவீத பங்குகளை 11.2 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.56 ஆயிரம் கோடி) கொடுத்து, வோடபோன் நிறுவனம் கையகப்படுத்தியது. 2007-ம் ஆண்டு வெளிநாட்டில் நடந்த இந்த வர்த்தக பேரத்துக்கு வருமான வரித்துறை வரி விதித்தது.
இதை எதிர்த்து வோடபோன், மும்பை உயர் நீதிமன்றத்தை நாடியது. அங்கு வருமான வரித்துறைக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. உடனடியாக ஹட்சிசன் நிறுவனம் வரியை செலுத்த வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டது. இது பெரிய சர்ச்சையைக் கிளப்பியதால் அதை எதிர்த்து வோடபோன் நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது.
மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தும், வெளிநாட்டில் உள்ள நிறுவனத்துடன் நடந்த வர்த்தக பேரத்தில் ரூ.11 ஆயிரம் கோடி வருமான வரி விதிக்க வருமான வரித்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் 20-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. பேரத்தில் சம்பந்தப்பட்ட ஒரு நிறுவனம் மட்டுமே வெளிநாட்டில் உள்ளது. ஆனால் வாங்கிய நிறுவனம் இந்தியாவில் வரத்தகம் செய்கிறது. எனவே ஹட்சிசன் நிறுவனம் வரி செலுத்தியாக வேண்டும் என மனுவில் கூறப்பட்டது.
அதை தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா, நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்து, மத்திய அரசின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து நேற்று தீர்ப்பு அளித்தனர்.