மாவோயிஸ்டுகள் கோரிக்கையை ஏற்று 27 பேரை விடுதலை செய்கிறது ஒரிசா அரசு
புவனேஸ்வர்: மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட இத்தாலியர் மற்றும் எம்.எல்.ஏ.வை மீட்க சிறையில் உள்ள 27 பேரை விடுதலை செய்வதாக ஒரிசா மாநில முதலமைச்சர் நவீன்பட்நாயக் தெரிவித்துள்ளார்.
ஒரிசா சட்டப்பேரவையில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்த நவீன்பட்நாயக், மாவோயிஸ்டுகளின் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ. ஜிஹா ஹிகாவை மீட்க மல்காங்கிரி மற்றும் கோரபுட் சிறைகளில் உள்ள சாசி முலியா ஆதிசபா சங்கம் என்ற பழங்குடி அமைப்பின் நிர்வாகிகள் 15 பேரையும் 8 மாவோயிஸ்டு அமைப்பின் உறுப்பினர்களையும் விடுதலை செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் ஒரிசா மாநில மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட இத்தாலிய சுற்றுப் பயணியை மீட்பதற்காக மேலும் 4 மாவோயிஸ்டுகளை விடுவிப்பது தொடர்பாக ஏப்ரல் 5-ந் தேதி முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை ஏற்று இத்தாலிய சுற்றுப் பயணியையும் எம்.எல்.ஏ.வையும் மாவோயிஸ்டுகள் பாதுகாப்பாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் நவீன்பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடத்தப்பட்ட ஆளும் கட்சி எம்.எல்.ஏ. ஜிஹா ஹிகாவை விடுதலை செய்ய இன்று வரை மாவோயிஸ்டுகள் கெடு விதித்திருந்த நிலையில் முதலமைச்சர் நவீன்பட்நாயக் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.