தென்காசி, கடையத்தில் தொடரும் பீதி: மர்மகாய்ச்சலுக்கு 10ம் வகுப்பு மாணவன் பலி
தென்காசி: கடையநல்லூரில் மர்ம காய்ச்சலுக்கு 10ம் வகுப்பு மாணவன் பலியானார். இதை தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர், வடகரை பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. ஏற்கனவே கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக இப்பகுதியில் மர்ம காய்ச்சல் உள்ளது. ரத்த பரிசோதனையில் புதுவிதமான வைரஸ் தாக்குதலால் இதுபோன்ற காய்ச்சல் பரவுவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் மர்ம காய்ச்சலுக்கு கடையநலலூரைச் சேர்ந்த சந்துரு, கார்த்திகேயன், 10 மாத பெண் குழந்தை, பெண் உள்பட 4 பேர் பலியாகினர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் நெல்லை, தென்காசி, மதுரையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வடகரையிலும் இந்த காய்ச்சல் பரவியுள்ளது. வடகரை காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பண்டாரத்தின் மகன் வனராஜ், கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். முதல் மூன்று தினங்கள் வடகரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரை சாப்பிட்டும் கேட்காததால் தென்காசி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பிறகு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நேற்று முன்தினம் இரவு வனராஜ் இறந்தார். அவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி முடிவுக்காக காததிருந்தார். அதே போல் வடகரை முகைதின்பிச்சை மனைவி் பானு, சேக் உசேன் மனைவி முகைதின், செய்யது மசூது மனைவி லைலா, முகமது உசேன் மனைவி அலிபாத்து, சப்பாணி மனைவி சுடலிமுத்து, கணபதி மனைவி காளியம்மாள், முருகையா மனைவி சந்திரா, கருப்பையா மனைவி பரமராக்கு ஆகியோர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், நெல்லை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.