18 நாளக்கு ஒருமுறை தண்ணீர் விநியோகம்...கரூரில் கொந்தளித்த மக்கள்
கரூர்: கரூர் பசுபதிபாளையத்தில் 18 நாளைக்கு ஒரு முறை குடி நீர் வினியோகம் செய்வதை கண்டித்து அப்பகுதி பொது மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான பசுபதிபாளையத்தில் உள்ள 30, 31, 32 வது வார்டுகளில் உள்ள நடுத்தெரு, தெற்கு தெரு, வடக்கு தெரு, காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ராமானூரில் உள்ள மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 6 மாதங்களாக 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. தற்போது வடக்கு காந்தி கிராமம் பகுதிகளுக்கும் ராமானூர் மேல்நிலை தொட்டியில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால், கடந்த சில தினங்களாக 18 நாள் முதல் 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்யப்படுவதாக பொது மக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றது.
இந்த நிலையில், அந்த குடிநீரும் சரியாக வருவது இல்லை என கூறி அப் பகுதியைச் பகுதியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பசுபதிபாளையம் காவல் நிலையம் அருகே திடீர் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது, அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ராஜசேகரனுக்கும், பொது மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனையடுத்து, அங்கு, கரூர் தாசில்தார் பாலசுப்ரமணியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர் ரவி ஆகியோர் வந்து, பொது மக்களை சமாதானப்படுத்தினர். இதனையடுத்து சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.