காவிரி ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்க நல்லக்கண்ணு கோரிக்கை
திருச்சி: நாட்டு நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாசுரபி ஹாலில் பல்வேறு விவசாயிகள் சங்கம் சார்பில் மணல் கொள்ளை குறித்த புகைப்படக் கண்காட்சி துவக்க விழா நடந்தது. இந்த கண்காட்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் நல்லக்கண்ணு துவைக்கி வைத்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதை தடை செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கில் தாமிரபரணி ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு மணல் அள்ள நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
லட்சக்கணக்கான விவசாயிகள், பொதுமக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கி வரும் காவிரி ஆற்றிலும் மணல் கொள்ளை நடைபெறுகிறது. எனவே, காவிரி ஆற்றிலும் மணல் அள்ளத் தடை விதிக்க வேண்டும் என்று காவிரி நதி பாதுகாப்பு அமைப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு வரும் 18 ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதை முன்னிட்டு தான் இந்த புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் உள்ள ஆறுகளில் சட்டத்துக்குப் புறம்பாக விதிகளை மீறி மணல் கொள்ளை நடக்கிறது. கனிமவள பாதுகாப்புக்கென பல விதிமுறைகள், சட்டங்கள் இருந்தாலும் அவைகள் அனைத்தும் அப்பட்டமாக மீறப்படுகின்றன. தமிழகத்தில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் துணையோடு மணல் கொள்ளை தங்கு தடையின்றி நடைபெறுகிறது. இதே நிலை நீடித்தால் தமிழகம் விரைவில் பாலைவனமாகிவிடும். தமிழகத்தில் நியமிக்கப்பட்ட ஆற்று மணல் கண்காணிப்புக் குழு செயலிழந்துவிட்டது. இதனால் அக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
இந்த கண்காணிப்புக் குழுவை மறு கட்டமைப்பு செய்ய வேண்டும். மணல் கொள்ளையர்கள் மீது குண்டாஸ் உட்பட பல கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.