5 ஆண்டுகால பதவிக் காலத்தில் தூக்கு தண்டனையை ரத்து செய்தார் பிரதீபா பட்டீல்
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமைக்குரிய பிரதீபாவின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இவர் தமது பதவிக் காலத்தில் தூக்குத் தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் விவகாரம் பெரிதும் பேசப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் ராஜீவ் கொலை வழக்கில் மூவரின் கருணை மனுவை நிராகரித்திருந்தார்.
இருப்பினும் 5 ஆண்டுகளில் தமது பரிசீலனைக்கு வந்த கருணை மனுக்களில் 35 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உள்ளார். அதாவது அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து இருக்கிறார். இவர்கள் 19 வழக்குகளில் தொடர்புடையவர்கள்.
கடந்த 1981-ம் ஆண்டு முதல் இதுவரை 91 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி கருணை மனு அனுப்பி இருக்கிறார்கள். அவர்களில் 31 பேரின் கருணை மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்த 31 மனுக்களில் 23 மனுக்கள் பிரதீபா பட்டீலால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை ஆகும்.
திருமண விழா ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேரை கொன்று குவித்த வழக்கில் பியாரா சிங், சரப்ஜித் சிங், குர்தேவ் சிங், சத்னம் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. அவர்களுடைய தூக்கு தண்டனையையும் ரத்து செய்து உள்ளார்.