புளியங்குடி இன்டேன் கேஸ் விநியோகஸ்தரின் உரிமம் திடீர் ரத்து
நெல்லை: புளியங்குடியில் கேஸ் வினியோகஸ்தர் வீடடில் பதுக்கி வைத்திருந்த சிலிண்டர் வெடித்த சம்பவத்தால் வினியோகஸ்தர் உரிமத்தை 3 மாதங்களுக்கு ரத்து செய்து நிறுவன அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
நெல்லை மாவட்டம் புளியங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இன்டேன் கேஸ் நிர்வாகம் சார்பில் புளியங்குடி சிந்து இன்டேன் கேஸ் வினியோகஸ்தர் நியமிக்கப்பட்டு இருந்தார். இதன் மூலம் சுமார் 10,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கேஸ் சிலிண்டர் பெற்று வந்தனர். இந்நிலையில் சிலிண்டர் வழங்கியதில் குளறுபடி மற்றும் சீரான வினியோகம் செய்யாமல் வாடிக்கையாளர்களை அலைக்கழிப்பது குறித்து இன்டேன் கேஸ் நிர்வாக்ததிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே கடந்த மே மாதம் 9ம் தேதி புளியங்குடி இன்டேன் கேஸ் வினியோகஸ்தர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 சிலிண்டர்கள் வெடித்துச் சிதறின. இது குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு விசாரணையில் உள்ளது. இந்நிலையில் சிலிண்டர்கள் வெடித்தது குறித்தும், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்டேன் கேஸ் மதுரை மண்டல துணை மேலாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் புளியங்குடி டிஎன் புதுக்குடியில் உள்ள வினியோகஸ்தர் அலுவலகத்தில் ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து இன்டேன் கேஸ் நிறுவாகத்தின் சட்டவிதிகளை மீறியதற்காக 3 மாதம் வினியோகஸ்தர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து அதற்கான உத்தரவை வினியோகஸ்தர் சண்முகசுந்தரியிடம் வழங்கினர்.