ஆதர்ஷ் ஊழல் வழக்கில் அசோக் சவான் மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல்
மும்பை: ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் வழக்கில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான் உள்பட 13 பேர் மீது சிபிஐ இன்று குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து அவர் எந்நேரத்திலும் கைதாகலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்காக கட்டப்பட்ட ஆதர்ஷ் வீட்டு மனைகளை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஒதுக்கிக் கொண்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. ஆதர்ஷ் ஊழல் விவகாரம் பூதாகரமாக வெடித்ததால் தான் அசோக் சவான் மகாராஷ்டிரா முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அவர் மீது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 29ம் தேதியே சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் அசோக் சவான் உள்பட 13 பேர் மீது சிபிஐ இன்று குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிக்கை 10,000 பக்கங்கள் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 14 பேரில் 9 பேர் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டனர். ஆனால் சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய கால தாமதம் ஆனதால் அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் சிபிஐ இன்று குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து அசோக் சவான் உள்ளிட்டோர் எந்நேரத்திலும் கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications