எனது மகனை மயக்க நிலையிலேயே வைத்துள்ளனர்...நித்தியானந்தா மீது மதுரை நபர் புகார்!
மதுரை: நித்தியானந்தாவின் பிடியில் சிக்கியுள்ள தனது மகனை மீட்டுத் தருமாறு கோரி மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ராவிடம் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.
மதுரை சோலைஅழகுபுரத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் ஆட்சியரை இன்று நேரில் சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில், எனது மகன் வாசுமுத்து. 24 வயதான அவன் பட்டப்படிப்பு படித்துள்ளான். கடந்த 2010ம் ஆண்டு தனது நண்பர் மூலம் பிடதி ஆசிரமத்தில் போய்ச் சேர்ந்து விட்டான்.
அதன் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை. அங்கிருந்து எனக்குப் போன் செய்தான். இங்கு நடப்பது தனக்குப் பிடிக்கவில்லை, எனவே கூட்டிக் கொண்டு போங்கள் என்று கூறினான். இதையடுத்து நாங்கள் அங்கு சென்றபோது, உடன் வருவதாக கூறினான். ஆனால் நித்தியானந்தாவை சந்திக்குமாறு கேட்டுக் கொண்டான். இதையடுத்து நாங்கள் நித்தியானந்தாவை சந்தித்து மகனை திருப்பி அனுப்புமாறு கேட்டுக் கொண்டோம்.
ஆனால் அடுத்த நாள் எங்களுடன் வர முடியாது என்று எனது மகன் கூறி விட்டான். நித்தியானந்தாவின் பெயரை சொல்லியபடி எப்போதும் மயக்க நிலையிலேயே அவன் இருக்கிறான். தற்போது அவனை மதுரை ஆதீன மடத்தில் வைத்திருப்பதா தெரிகிறது. எனவே நித்தியானந்தாவின் பிடியில் சிக்கியுள்ள எனது மகனை மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் வாசுமுத்து.
காளிமுத்து லோடுமேனாக இருக்கிறார். இவரது மகனான வாசுமுத்து பி.காம் படித்துள்ளார். இவர் பிடதி ஆசிரமத்திற்குப் போயிருந்த போது கஞ்சா அடித்தது போல மயக்க நிலையில் மகனைப் பார்த்துள்ளார். மேலும் நித்தியானந்தாவிடம் போய்க் கேட்டபோது அவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. தனது சகோதரியின் திருமணத்திற்குக் கூட வாசுமுத்து வரவில்லையாம்.