ஒரே இடத்தில் 5 ஆண்டு தங்கி ரசீது வைத்திருந்தால் உடனே பட்டா
தூத்துக்குடி: ஒரே இடத்தில் 5 ஆண்டுகள் குடியிருந்து அதற்கான ஆதாரமாக வீட்டு ரசீது, மின் இணைப்பு ரசீது வைத்திருந்தால் அவர்களுக்கு காலதாமதம் இல்லாமல் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று தமிழக அரசின் நில நிர்வாக ஆணையர் ஜதிந்திரநாத் ஸ்வைன் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டா மாறுதல்கள், அரசு நிலங்கள் குத்தகை, அரசின் நிலுவையில் உள்ள பட்டா சம்பந்தமான திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசின் முதன்மை செயலாளரும், நில நிர்வாக ஆணையருமான மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜதிந்திரநாத் ஸ்வைன் தூத்துக்குடி வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
பட்டா மாற்றம் எந்த அளவிற்கு வழங்கப்படுகிறது. ஜமாபந்தி காலத்தில் எப்படி வழங்கப்பட்டது என்பது குறித்து அவர் ஆய்வு செய்தார். ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் பட்டா மாற்றத்தை கால தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இலவச வீட்டுமனை பட்டாவை பொறுத்தமட்டில் நகர்புறம், கிராமப் புறங்களில் ஒரே இடத்தில் 5 ஆண்டுகள் இருந்தும், வீட்டுத் தீர்வை, மின் இணைப்பு போன்ற ஆவணங்கள் வைத்திருந்தால் அவர்களுக்கு உடனுக்குடன் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். ஆலோசனைக்கு பின்னர் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்திற்கு சென்று மக்களுக்கு வழங்க தயாராக வைக்கப்பட்டிருந்த பட்டாக்களை பார்வையிட்டார்.