சிதலமடையும் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை: ராம.கோபாலன்
சென்னை: கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை கடல் காற்றால் மாசுமடைந்து, சிதலமடைந்து வருகிறது. இதனை தமிழக அரசை சீர்படுத்திட வேண்டும் என்று இந்து முன்னணித் தலைவர் இராம. கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளுவர் தமிழுக்கும், தமிழகத்திற்கும் ஈடு இணையில்லா பெரும்புகழை நிரந்தரமாக ஏற்படுத்திக் கொடுத்திருப்பவர். இவரது நினைவை தமிழகம் என்றென்றும் போற்றும் வண்ணம் குமரி கடல் பாறையில் சிலை எடுத்திட வேண்டும் என்று, சுவாமி விவேகானந்தர் தவம் செய்த அந்த நினைவுச் சின்னத்தை நிறுவிய குழுவின் தலைவரான திரு.ஏக்நாத் ரானடே தமிழக அரசிடம் ஆலோசனை வைத்து, அதனையும் தங்கள் குழுவே அமைத்துத் தரவும் அனுமதி கேட்டார்.
தமிழக அரசு தாங்களே அந்த நினைவுச் சின்னத்தை நிறுவுவதாக அறிவித்தது. திருவள்ளுவரின் 133 அடி உயர சிலையை சிற்பி கணபதி ஸ்தபதி வடிவமைத்துக் கொடுத்தார். தற்போது அந்தச் சிலை கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளின் கண்ணையும் கருத்தையும் ஈர்த்து வருகிறது. உலகிலேயே பெரிய சிலை இது.
கன்னியாகுமரி வரும் சுற்றுலாப் பயணிகள் சுவாமி விவேகானந்தர் நினைவுப்பாறையையும், திருவள்ளுவர் சிலையையும் கண்டு களிக்கிறார்கள்.
அத்தகைய பெருமைமிகு திருவள்ளுவர் சிலை தற்போது கடல் காற்றால் மாசுமடைந்து, சிதலமடைந்து வருகிறது. இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு, தகுந்த பராமரிப்புப் பணிகளை செய்திட வேண்டும்.
என்றென்றும் நிலைத்து இருக்க வேண்டிய நினைவுச் சின்னம் அரசாங்க அதிகாரிகளின் அலட்சியத்தால் சிதலமடைந்து விடக்கூடாது. இது தமிழகத்திற்கும், தமிழக அரசிற்கும் தீராத களங்கமாகிவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம் என்று கூறியுள்ளார்.