கெஜ்ரிவாலின் உடல் நிலை மோசம்: உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து அடம்
ஊழலுக்கு எதிராகவும், வலுவான லோக்பால் மசோதா வேண்டியும் அன்னா குழுவினர் கடந்த 25ம் தேதி முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அன்னா ஹசாரேவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார். வலுவான லோக்பால் மசோதா நிறைவேறும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று அன்னா குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இன்று 8வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இத்தனை நாட்களாக டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனை டாக்டர்கள் அவரை பரிசோதித்தது வந்தனர். ஆனால் இன்றில் இருந்து தன்னை எந்த அரசு மருத்துவரையும் பரிசோதிக்க அனுமதிக்கப் போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதே போன்று இன்னொரு உறுப்பினரான கோபால் ராயின் நிலைமை கெஜ்ரிவாலை விட மோசமாக உள்ளது. அவர்களை உடனே உண்ணாவிரத்தத்தை கைவிடுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியும் அவர்கள் கேட்கவில்லை.
இதற்கிடையே உண்ணாவிரதமே இருக்கக் கூடாது என்று மருத்துவர்கள் கூறியும் அன்னா கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவர்கள் என்னதான் உண்ணாவிரதம் இருந்தாலும் அரசு அவர்களின் கோரிக்கையை கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை.