காவிர் நதிநீர் ஆணையத்தைக் கூட்டக் கோரும் தமிழக அரசு மனு மீது 17ம் தேதி விசாரணை
டெல்லி: காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்டக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது வரும் 17-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.
கோடைகாலத்தில் காவிரி நதிநீரை எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று காவிரி நதிநீர் ஆணையம் என்று சில வரையறைகளை வகுத்திருந்தது. ஆனால் அதையும் மீறி தமிழகத்துக்கு திறந்துவிடப்பட வேண்டிய நீரையும் கர்நாடகமே பயன்படுத்திக் கொண்டதால் நடப்பு ஆண்டில் மேட்டூர் அணை விவசாயத்துக்காகத் திறக்கப்படவில்லை.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார். இதற்கும் பலனளிக்காத நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
அந்த மனுவில் கூறியிருந்ததாவது: மழை குறைவான நாட்களில் காவிரி தண்ணீரை எப்படி பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதை வரையறுத்து 2002ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை இதுவரை கர்நாடக அரசு நடைமுறைப்படுத்தவில்லை. நதிநீர் ஆணையத்தின் உத்தரவுபடியும் கர்நாடகா நடந்து கொள்ளவில்லை. தற்போது உள்ள சூழ்நிலையில் காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையத்தை உடனடியாக கூட்டவும் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த மனு பலநாட்கள் வரை விசாரணைக்கு வராததால், இன்று தமிழக அரசின் சார்பான வழக்கறிஞர் வைத்தியநாதன் நீதிபதிகள் டி கே ஜெயின் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் ஆஜராகி மனுவைப் பற்றிக் கூறினார். அப்போது நீதிபதி, ஒரு பிரதமருக்கு எப்படி ஆணையத்தைக் கூட்டுங்கள் என ஆணையிட முடியும்? வேண்டுமானால், ஒரு ஆலோசனை வழங்கலாம். எனவே, மனுவை எதிர்வரும் 17ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து இம்மனு மீது 17-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.