இலங்கை வரதராஜ பெருமாளால் பெரும் தொல்லை. வேற இடத்தில் குடியமர்க்க கோரும் டெல்லிவாசிகள்
இலங்கையில் 1988-90களில் இந்திய அமைதிப் படை நிலைகொண்டிருந்தது. அப்போது இந்திய அமைதிப் படையின் பாதுகாப்புடன் இலங்கையின் வடகிழக்கு மாகாண சபையின் தலைவராக வரதராஜ பெருமாளை நியமித்து 'பொம்மை அரசாங்கத்தை' அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி நடத்தினார்.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இந்திய அமைதிப் படையின் போரைத் தொடர்ந்து வரதராஜ பெருமாளின் பொம்மை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அத்துடன் இந்திய அமைதிப் படை இலங்கையைவிட்டு வெளியேறியபோது வரதராஜ பெருமாளும் நாட்டை விட்டு தப்பி ஓடி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் வரதராஜ பெருமாள் உயிருக்கு ஆபத்து என்று கூறி அவரது இருப்பிடத்தை மிகவும் ரகசியமாக வைத்து வந்தது இந்திய அரசு. இந்தியாவில் ராஜஸ்தானில் வசிக்கிறார்... ஒடிஷா காடுகளில் வசிக்கிறார்... வடகிழக்கு மாகாணத்தில் வசிக்கிறார்.. என்றுதான் வரதராஜ பெருமாள் பற்றிய செய்திகள் சொல்லப்பட்டு வந்தன.
ஆனால் இந்திய ரா மற்றும் ஐபியின் நேரடி பாதுகாப்பின் கீழ் இத்தனை ஆண்டுகாலமும் தலைநகர் டெல்லியில்தான் வரதராஜ பெருமாள் வசித்து வந்திருக்கிறார் என்ற தகவல் இப்போதுதான் வெளியே வந்திருக்கிறது- ஒரு பொதுநலன் வழக்கு மூலம்!
டெல்லி சர்வோதயா என்கிளேவ் என்ற குடியிருப்பில் வசித்து வருவோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றை தொடர்ந்துள்ளனர்.
அம்மனுவில், வரதராஜ பெருமாளுக்கு டெல்லி போலீசின் 25 பாதுகாவலர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இந்த பாதுகாவலர்கள் சர்வோதயா என்கிளேவ் குடியிருப்புக்கு முன்பாக உள்ள டெல்லி மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காவை ஆக்கிரமித்து கூடாரம் அமைத்துள்ளதுடன் பொதுமக்கள் பூங்காவை பயன்படுத்தவும் கெடுபிடி செய்து வருகின்றனர். இதனால் வரதராஜ பெருமாளை வேறு இடத்தில் குடியமர்த்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை பரிசீலித்த டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சிக்ரி, இது தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.