கருணாநிதியின் பிறந்தநாள் போஸ்டரில் அதிமுக நிர்வாகி பெயர்: வழக்கு தொடர முடிவு
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா போஸ்டரில் தமது பெயரை போட்டது குறித்து வழக்கு தொடரப் போவதாக திமுகவில் இருந்து அதிமுகவுக்கு சென்ற மிசா சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
திமுகவில் 45 ஆண்டுகளாக இருந்தவர் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி. கடந்த 1976ம் ஆண்டு மிசா சட்டத்தை எதிர்த்துப் போராடியதற்காக கைதாகி வேலூர் சிறையில் ஒரு ஆண்டு காலம் இருந்ததால் அவர் மிசா சுந்தரமூர்த்தி என்று அழைக்கப்பட்டார். கடந்த 1996ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மதுராந்தகம் பகுதியில் போட்டியிட மிசா சுந்தரமூர்த்தி சீட் கேட்டார். ஆனால் அவருக்கு சீட் கொடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 2006ம் ஆண்டு நடந்த பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட மிசா சுந்தரமூர்த்தியின் மகன் ஜெயசங்கரன் திமுக தலைமையிடத்தில் டிக்கெட் கேட்டார். ஆனால் அவருக்கு டிக்கெட் கொடுக்க கட்சி மறுத்தது. இதையடுத்து அவர் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றார். தொடர்ந்து கடந்த 2007ம் ஆண்டு தந்தையும், மகனும் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் 89வது பிறந்தநாள் விழா கூடுவாஞ்சேரியில் நடக்கிறது. இதற்காக திமுகவினர் அடித்துள்ள போஸ்டர்களில் மிசா சுந்தரமூர்த்தியின் பெயர் உள்ளது. இதைப் பார்த்து அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் போஸ்டரில் எனது பெயரைப் போட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். என்னை களங்கப்படுத்த திட்டமிட்டே இவ்வாறு செய்துள்ளனர். உடனே போஸ்டரில் இருந்து எனது பெயரை நீக்கிவிட்டு சம்பந்தப்பட்டவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் வழக்கு தொடர்வேன் என்றார்.