மக்களின் ஒற்றுமைக்கு பாடுபடுவோம்: ஜெயலலிதா தலைமையில் அரசு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு
சென்னை: இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் இடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஏற்பட பாடுபடுவோம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னை கோட்டையில் அரசு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 18ம் தேதி நல்லிணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் நல்லிணக்க நாள், நேற்று சென்னை கோட்டையில் உள்ள ராணுவ மைதானத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அனுசரிக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கியின் தலைமையில் அரசு ஊழியர்கள் அணிவகுத்த நின்று நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
நல்லிணக்க நாள் உறுதிமொழி வாசகத்தை முதல்வர் ஜெயலலிதா வாசிக்க, அரசு ஊழியர்கள் அனைவரும் திரும்ப கூறினர்.
நல்லிணக்க நாள் உறுதிமொழியில் கூறியதாவது,
நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமாற உறுதிமொழி எடுத்து கொள்கிறேன்.
மேலும் எங்களுக்கு இடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், அரசியல் அமைப்பு சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன் என்றனர்.