மகளின் காதல் திருமணத்தை ஆதரித்த அதிமுக கவுன்சிலரை ஊரைவிட்டு ஒதுக்கி கொலை மிரட்டல்
தி்ருவள்ளூர்: தனது மகளின் காதல் திருமணத்திற்கு ஆதரவாக இருந்த அதிமுக கவுன்சிலரை குடும்பத்தோடு ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததுடன் மிரட்டல் விடுத்தவர்களில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் சின்ன மாங்கோடு குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் (46). மீஞ்சூர் யூனியன் 1-வது வார்டு அதிமுக கவுன்சிலர். அவரது மகள் தீபா பெரிய மாங்கோடு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த 22ம் தேதி தனது காதலரை மணந்து கொண்டார். இந்த காதல் திருமணத்திற்கு தேவராஜ் ஆதரவாக இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த திருமணத்திற்கு தேவராஜ் ஊரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தேவன், கோபால், பிரகாஷ், சங்கர், சுந்தர மூர்த்தி, விஜய், சத்யா, மாரியப்பன், சின்னராஜு, சீனு, ஆனந்தன், பிரபு, பாக்கியராஜ், டி. தேவன், ஜெகன்நாதன் ஆகிய 15 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் தேவராஜ் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததோடு கிராமத்தில் உள்ள அனைத்து வீட்டுக்கும் 2 குவார்ட்டர் மதுபாட்டில்களும், கிராம நிர்வாகத்திற்கு ரூ.5 லட்சம் அபராதமும் செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தி வந்துள்ளனர்.
அவ்வாறு செய்யவில்லை என்றால் குடும்பத்தோடு தீ வைத்து கொளுத்துவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதையடுத்து தேவராஜ் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சின்ன மாங்கோடு கிராமத்தைச் சேர்ந்த தேவன், மூர்த்தி, ரமேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 12 பேரை தேடி வருகின்றனர்.