காவிரி நீர் ஆணையம் விரைவில் கூடும்-உச்சநீதிமன்றத்திற்கு மத்திய அரசு பதில்
டெல்லி: காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்ட வேண்டும் என்ற தமிழக அரசின் மனு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, காவிரி நதி நீர் ஆணையத்தில் உள்ள மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. எனவே விரைவில் காவிரி நதி நீர் ஆணையம் கூட்டப்படும் என்று தெரிவித்துள்ளது.
காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்புபடி, தமிழகத்துக்கு அனுமதிக்கப்பட்ட தண்ணீரை கர்நாடகா திறந்து விடவில்லை. இதனால் தமிழகத்தில் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதில் பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்ட உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் வைத்தியநாதன் சமர்ப்பித்த இந்த மனுவிற்கு பதிலளித்த உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு, பிரதமருக்கு நீதிமன்றம் எப்படி உத்தரவிட முடியும்?, மேலும் காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்டமாறு பிரதமரை, நீதிமன்றம் எப்படி கட்டாயப்படுத்த முடியும்? என்று தெரிவித்தது.
எனவே தமிழக அரசின் மனுவிற்கு பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம், மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய அரசு தரப்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் டி.கே.ஜெயின், மதன் லோகுர் ஆகியோர் கொண்ட பெஞ்சு முன் விசாரணைக்கு வந்தது.
அந்த மனுவில், காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்ட பிரதமர் சம்மதம் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. எனவே 4 மாநில அரசுகளும் ஒப்புதல் அளித்த பிறகு, காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்டும் தேதி தீர்மானிக்கப்படும்.
கடந்த 22ம் தேதி வரை கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு, காவிரியில் 5.81 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் மொத்தம் 91.75 டி.எம்.சி தண்ணீர் பெற்றிருக்க வேண்டிய தமிழகம், 85.95 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.