வெளிநாட்டில் மருத்துவப் பரிசோதனையை முடித்துவிட்டு டெல்லி திரும்பிய சோனியா
டெல்லி: மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 1ம் தேதி வெளிநாடு சென்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று நாடு திரும்பினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் அவருக்கு எந்த நோய்க்காக அறுவை சிகிச்சை நடந்தது என்பதை காங்கிரஸ் ரகசியமாகவே வைத்துள்ளது. இந்நிலையில் அவர் கடந்த 1ம் தேதி மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு சென்றார்.
இது வழக்கமாக செய்யப்படும் மருத்துவப் பரிசோதனை தான் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்தார். வெளிநாட்டில் செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் எதுவும் இல்லை என்று அவரது குடும்பத்திற்கு நெருங்கியவர்கள் ஒரு முன்னணி ஆங்கில நாளிதழுக்கு தெரிவித்துள்ளனர்.
மருத்துவப் பரிசோதனை முடிந்து அவர் நேற்று நாடு திரும்பினார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறுவை சிகிச்சை முடிந்ததில் இருந்து சோனியா மருத்துவப் பரிசோதனைக்காக இதுவரை 6 முறை வெளிநாடு சென்று வந்துள்ளார். அவர் கடந்த பிப்ரவரி மாதம் வெளிநாடு சென்றபோது பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, சோனியாவின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல் மற்றும் ஜனார்த்தன் திவேதி ஆகியோர் அடங்கிய குழு கட்சி வேலைகளை கவனித்துக் கொண்டது.
ஆனால் அதன் பிறகு அவர் வெளிநாடு சென்று வந்தபோது எந்த குழுவும் அமைக்கப்படவில்லை.