நாடார்கள் குறித்த அவதூறு பாடம்... சிபிஎஸ்இ இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை: சிபிஎஸ்இயின் 9ம் வகுப்பு பாட நூலில் நாடார் சமுதாயத்தினர் குறித்து இடம் பெற்றுள்ள பாடம் குறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி சிபிஎஸ்இ இயக்குநருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் நாடார் என்பவர் இதுதொடர்பாக பொது நலன் மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில்,
சிபிஎஸ்இ 9-வது வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நாடார் சமூகத்தை பற்றி தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சமுதாயத்தின் கவுரவத்தையும், தரத்தையும் குறைப்பதாக உள்ளது.
இந்த சமூகம் முன்னாள் முதல்வர் காமராஜர் உள்ளிட்ட பல்வேறு சிறந்த அரசியல் தலைவர்களை தந்துள்ளது. சமூகம், பொருளாதார மாற்றத்துக்கு இந்த சமூகம் மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளது.
ஆனால் சமுதாய சீர்திருத்தத்துக்காக போராடிய ஐயா வைகுண்டரின் போராட்டம் இந்த பாடத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ இயக்குனர் உள்நோக்கத்துடன் இந்த பாடத்தை சேர்த்துள்ளார். இது இந்த சமூகத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது. எனவே சிபிஎஸ்இ 9-வது வகுப்பு சமுக அறிவியல் பாட புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய இந்த பகுதியை நீக்க உத்தரவிட வேண்டும். இதற்காக சிபிஎஸ்இ இயக்குனர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் ராஜேந்திர பிரசாத் நாடார்.
இந்த மனு நீதிபதிகள் எலிபி தர்மாராவ், அருணா ஜெகதீசன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 4 வாரத்திற்குள் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி, சிபிஎஸ்இ இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.